கடந்த ஒரு வாரத்தில், தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடந்த சம்பவங்கள், வேதனை தருகின்றன.
சென்னையில் மிகப்பழமையானதும், 175 ஆண்டுகால கவுரவ பாரம்பரியம் கொண்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் நடத்திய அரிவாள், கத்தி அராஜக மோதல், இனி வரலாற்றில் இடம்பெறும். இக்கோஷ்டி மோதலை அடுத்து, எட்டு மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள், வேறு கல்லூரிகளில் சேர்ந்து உடனடியாக கல்வியை தொடர முடியாது.
அக்கல்லூரி முதல்வர் மாற்றப்பட்டு, வேறு முதல்வர் நியமிக்கப்பட்டு, அவர் அக்கல்லூரி யில் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள முன்வந்திருக்கிறார். இம்மாறுதலைத் தொடர்ந்து தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள சில முதல்வர்கள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள மற்றொரு கல்லூரியான நந்தனம் அரசு கல்லூரியில் உள்ள முதல்வர் மற்றும் பல்வேறு துறையின் பேராசிரியர்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர். அங்குள்ள மாணவர்களின் செயல்களும் அவ்வப்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு காரணமாகி விடுகின்றன. இதே காலகட்டத்தில், மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு கல்லூரியைச் சேர்ந்த, இரு மாணவியர் மீது ஆசிட் வீச்சு நடந்தது. கல்லூரிக்கு வெளியே இச்சம்பவம் நடந்தாலும், அரசு கல்லூரி மாணவியருக்கு பாதுகாப்பு கேட்டு அக்கல்லூரி மாணவ, மாணவியர் மறியல் செய்து கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
சென்னையில் நடந்த சம்பவங்கள், உச்சகட்ட நிகழ்ச்சியாக இந்த ஆண்டு உருவெடுத்த போதும், ஆண்டுதோறும் இக்கல்லூரி மாணவர்கள் நடத்தும், ’பஸ் டே’ நிகழ்ச்சிகள் நாகரிகத்தின் வெளிப்பாடு அல்ல. சினிமா தயாரிப்பாளர்களுக்கு, இக்கரு உதவியதே தவிர, வேறு பலன் இல்லை என்றால் தவறாகாது. கடந்த சில நாட்களாக, இக்கல்லூரி பகுதியைக் கடக்கும் சிட்டி பஸ்கள், போலீசார் பாதுகாப்புடன் பயணிக்கின்றன என்பது வேதனை தரும் செய்தி.
அரசு கல்லூரிகள் என்றால், கட்டுப்பாடு கொண்டுவர, அங்கு பணியாற்றும் முதல்வர்கள் அரசியல் உட்பட பல்வேறு தடைகளை தாண்ட வேண்டும். இதன் எதிரொலி தான், தற்போது நடைபெற்ற சம்பவங்கள். புதிய உலக சூழ்நிலைகளை ஆய்ந்து, கல்வியில் மாற்றங்களை அல்லது நன்னெறிகளை கொண்டு வராவிட்டால், எளிதில் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காது.
சீருடை, 80% வருகை பதிவு, தலைமுடி, எழுத்து இல்லாத ஷர்ட், நல்ல உடை போன்ற திட்டங்கள் தேவை இப்போது.
|
by nachimuthu,India 2014-09-18 18:28:07 18:28:07 IST |