தமிழக பள்ளி மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் குறைவு: ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Kalvimalar - News

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் குறைவு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்செப்டம்பர் 17,2014,10:59 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அரசு ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரில் அதிகமானோருக்கு, பாடப் புத்தகத்தில் வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதாக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு, பொதுத்தேர்வுகளில், மாநில அளவில் அதிக இடங்களை பிடித்த நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில், வாசிப்புத் திறன் மிக குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.ஏ., சார்பில், பல வகையான ஆய்வுகள், பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், எட்டாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, வாசிப்புத் திறன் குறித்து, கடந்த ஆண்டு, ஆய்வு நடத்தப்பட்டது.

கல்வித்துறை இணை இயக்குனர்கள் குழு, மாவட்ட வாரியாக சென்று, தமிழ் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, மாணவர்களிடம் கொடுத்து வாசிக்கச் செய்தது. அதில், பெரு நகரங்களில் உள்ள பள்ளிகளை தவிர்த்து, மற்ற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர், வாசிக்கத் திணறி உள்ளனர்.

இந்த ஆண்டு, பொதுத்தேர்வில், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட மாணவர்கள்தான், மாநில அளவில், அதிக மதிப்பெண்களை பெற்று ரேங்க் பெற்றனர். இந்த மாவட்ட மாணவர்கள் தான், வாசிப்புத் திறனில், மிகவும் பின் தங்கியிருப்பதாக, ஆய்வில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வு முடிவின் அடிப்படையில், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து துறை வட்டாரம் கூறியதாவது: மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, ஒரு சுற்றறிக்கையை இயக்குனர் அனுப்பி உள்ளார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், முறையாக, அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, மாணவர்களை, பாடப் புத்தகங்களை வாசிக்கச் செய்து, அவர்களின் திறனை அறிய வேண்டும். பாடப் புத்தகங்களை வாசிக்க, மாணவர்கள் திணறினால், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரிடம், விளக்கம் கேட்டு பெற வேண்டும் எனவும், இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு துறை வட்டாரம் தெரிவித்தது.

பிரச்னைக்கு அரசுதான் காரணம்!

மாணவரிடையே, வாசிப்புத் திறன்குறைவாக இருப்பதற்கு, ஆசிரியர், சரியாக பாடம் நடத்தாததுதான் காரணம் என, அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால், இதுகுறித்து அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின், தென்னிந்திய செயலர், அண்ணாமலை, பிரச்னைக்கு அரசுதான் காரணம் என குற்றம் சாட்டுகிறார்.

அவர் கூறியதாவது: தொடக்கக் கல்வித்துறை கீழ் இயங்கும் பள்ளிகளில், 10 ஆயிரம் பள்ளிகள், இரு ஆசிரியர் பணிபுரியும் பள்ளிகளாக உள்ளன; இது உண்மை. இரு ஆசிரியரில், ஒரு ஆசிரியர், பணியிட மாறுதல் பெற்றுச் சென்றால், அந்த பணியிடத்தை உடனடியாக நிரப்புவது இல்லை.

* இருவரில், ஒருவர் விடுமுறை எடுத்தாலும், ஒரு ஆசிரியர்தான் இருப்பார். ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தது 20 மாணவர்களாவது இருப்பர். இவ்வளவு பேருக்கும், ஐந்து பாடங்களை, ஒரே ஆசிரியர் எப்படி எடுக்க முடியும்?

* இரு ஆசிரியர் பள்ளியாக இருந்தாலும், ஐந்து பாடங்களை நடத்த வேண்டி உள்ளது.

* ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், 3,800 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. ஆனால் 1,650 ஆசிரியர் பணியிடம் மட்டும் தற்போது நிரப்பப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்கள், இரு ஆசிரியர் பள்ளிகளுக்கு வழங்கவில்லை.

* இதுபோன்ற நிலை இருந்தால், மாணவர்களுக்கு வாசிப்பு பிரச்னை; எழுதுவதில் பிரச்னை என, பல பிரச்னைகள் வரும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us