புதுடில்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும், ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்கும் பார்வையற்ற தேர்வர்களுக்கு, கூடுதல் நேரம் வழங்கப்படும் என, யு.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
இதுகுறித்து யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் பார்வையற்ற மாணவர்களுக்கு, முதல் நிலை தேர்வுகளில் இடம்பெறும், முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளில் கூடுதலாக, தலா 40 நிமிடங்கள் வழங்கப்படும்.
அதாவது, ஒரு மணி நேரத்திற்கு 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அந்த அடிப்படையில், ஒவ்வொரு தேர்வும், இரண்டு மணி நேரம் நடைபெறுவதால், முதல் தாள் தேர்வுக்கு 40 நிமிடங்களும், இரண்டாம் தாள் தேர்வுக்கு 40 நிமிடங்களும் கூடுதல் நேரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.