நாட்டில் நூற்றுக்கணக்கான கட்டடக்கலை (ஆர்கிடெக்சர்) கல்லூரிகள் இருந்தாலும், உலகளவில் 10 சிறந்த கட்டடக்கலை கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஒரு கல்வி நிறுவனம் கூட இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்திய கல்லூரிகளின் தரம் மென்மேலும் உயரவேண்டியுள்ளது என்பதையே இந்த ஆய்வு காட்டுகிறது.
எனினும், வேலை இல்லாத ‘ஆர்கிடெக்ட்’ என்று இன்று நாட்டில் யாருமில்லை. சேலம், மதுரை, சென்னை என எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும் கட்டடக் கலைஞருக்கான வாய்ப்புகள் அமோகமாக உள்ளன. அவர்கள் தங்களது பொருளாதார ரீதியாகவும் தன்னிறைவு அடைந்தவர்களாக இருக்கின்றனர்.
தேவையான திறன்கள்
கட்டடக் கலைஞர்கள் (ஆர்கிடெக்ட்), இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலான தத்துவம், பண்பாடு, நாகரிகம் மற்றும் கலைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். ஆனால், இந்தியக் கலை, தத்துவம் ஆகியவற்றை முழுமையாக அறியாமலேயே மேற்கத்திய கலாசாரத்திற்கு சென்றுவிடுகின்றனர். பர்சிய தூணை பிடித்துப்போனதால், அதை மட்டுமே தங்களது டிசைனில் இணைத்து, அது பர்சிய கட்டடக்கலைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்கின்றனர்.
எந்த ஒரு கலை, காலாசாரத்தையும் முழுமையாக புரிந்துகொண்டு அதற்கேட்ப தங்களது புத்தாக்க சிந்தனை வடிவமைப்பில் புகுத்த வேண்டும். எம்.எஸ். ஹுசைன், நந்தகோபால் போன்றவர்களின் ஒவ்வொரு பணியிலும், இந்தியக் கலை பிரதிபலிக்கிறது. கட்டடக்கலையைப் பொருத்தவரை, உள்ளார்ந்த ஆர்வமும், திறமையும் அவசியமாகிறது. அடிப்படையில் வரைதலில் ஆர்வம் இருக்கவேண்டும்.
கல்லூரிகளின் பங்கு
கட்டடக்கலை என்பது ஒரு ‘நோபல் புரொபஷன்’; சிறந்த டிசைன் அறிவு, தொடர்பு திறன், தீராத கலை ஆர்வம் ஆகியவையும் முக்கியம். கல்லூரிகள் அதற்கேற்ப மாணவர்களின் துறை சார்ந்த அறிவு, தனித்துவமிக்க திறன்களை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தரம் வாய்ந்த கருத்தரங்குகள் கல்லூரிகளில் நடத்தப்பட வேண்டும். அதிக போட்டிகளை நடத்தி, மாணவர்களை அதில் பங்கேற்க செய்ய வேண்டும். இன்றைய நிலையில் கட்டுமான துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், போதுமான கட்டடக்கலை திறன் இல்லை; அவர்களும் அவசியம் பயிற்சி பெற வேண்டியுள்ளது.
வேறுபாடு
ஆர்கிடெக்சர் மற்றும் சிவில் இன்ஜினியரிங் இரண்டிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பி.ஆர்க்., படிப்பில் கலாசார ரீதியிலான நகர கட்டமைப்பு, டிசைனிங் உள்ளிட்டவை அதிகளவில் இடம்பெறும். ஆக்கப்பூர்வமான சிந்தனை, புதிய வடிவமைப்பு, விசாலாமான எண்ணம் ஆகியவை கட்டடக்கலை துறையில் தேவையானவை.
பொதுவாக, கட்டடக்கலைஞர்கள் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட வடிவமைப்பை சரியாக புரிந்துகொண்டு அமல்படுத்துவதே சிவில் இன்ஜினியர்களின் பணி. எனவே, ஒரு ஆர்கிடெக்ட்டின் கற்பனையிலும், புத்தாக்க சிந்தனையிலும் உருவான வடிவமைப்பிற்கே சிவில் இன்ஜினியர்கள் நிஜத்தில் உருவம் கொடுக்கின்றனர். சிவில் இன்ஜினியரிங் படிப்பில் கணிதம், மெட்டீரியல், கட்டடத்தின் தன்மை குறித்த பாடங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.
உதாரணமாக, தஞ்சை பெரிய கோவில் எப்படி கட்டப்பட்டது? அதன் விமானத்தை உருவாக்க அந்தக் காலத்திலேயே எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பர்? இதுபோன்ற சுவாரஸ்யமானவற்றை ஆர்கிடெக்சர் படிப்பில் படிப்போம். சிவில் இன்ஜினியரிங் படிப்பில் கட்டட உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிகம் படிப்போம்.
எதிர்காலம்
நாட்டில் தற்போது 70 ஆயிரம் ஆர்கிடெக்ட் இருப்பர்; தமிழகத்தில் அவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரம் மட்டுமே. உளகளவில் இந்தியாவில் தான் அடுத்த 25 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மிகப்பெரிய வளர்ச்சி அடைய உள்ளது. சமீபத்திய பட்ஜெட்டில், நாட்டில் சுமார் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் குவிந்து வருகின்றன. எனவே, கட்டடக்கலைஞர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சம்பளம்
நல்ல கட்டடக்கலைஞருக்கு ஆரம்பமே மாதம் ரூ. 25 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். சில ஆண்டுகள் அனுபவத்தில் ரூ. 75 ஆயிரம் பெற முடியும். வெளிநாடுகளிலும் பெரிய அளவில் தேவை உள்ளதால், சம்பளத்திற்கு குறைவில்லை.
-ஜாபர் கான், கட்டடக்கலைத் துறை பேராசிரியர்