சென்னை: 'அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு தலையணை, கம்பளி சட்டை, ரெயின் கோட் வழங்கப்படும்,' என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* கடலூர், நந்தனார் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி வளாகம் மற்றும் திருவள்ளூர், செவ்வாய்ப்பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இரு பொறியியல் கல்லூரிகள், 24.6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை ஆதிதிராவிடர் நல பள்ளி வளாகத்தில், 10 கோடி ரூபாய் செலவில், ஐ.டி.ஐ., அமைக்கப்படும்.
* ஆதிதிராவிடர் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு, 4.93 கோடி ரூபாயில், உறையுடன் கூடிய தலையணை அளிக்கப்படும்.
* மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு, 3.8 கோடி ரூபாய் செலவில், ரெயின்கோட் மற்றம் கம்பளி சட்டை வழங்கப்படும்.
* பி.எட்., மற்றும் ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, தனியார் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.