சென்னை: தமிழகத்தில், சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நாளை(ஜுலை 30) முடிகிறது.
இதுவரை, 3,525 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். தமிழகத்தில், சென்னை, மதுரை, பாளையங்கோட்டை மற்றும் நாகர்கோவிலில் சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவம் சார்ந்த ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
சித்தா பி.எஸ்.எம்.எஸ்., ஆயுர்வேதம் பி.ஏ.எம்.எஸ்., யுனானி பி.யு.எம்.எஸ்., நேச்சுரோபதி மற்றும் யோகா பி.என்.ஓய்.எஸ்., மற்றும் ஓமியோபதி பி.எச்.எம்.எஸ்., படிப்புகளுக்கு 296 இடங்கள் உள்ளன. இதுதவிர, சுயநிதி கல்லூரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டுக்கு 900 இடங்கள் வரை கிடைக்கும். இந்த படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் 14ம் தேதி துவங்கியது.
இரண்டு வாரங்கள் ஆன நிலையில், இதுவரை 3,525 பேர், விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். இதில், 2,510 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், "விண்ணப்பங்கள் பெற, 30ம் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 31ம் தேதிக்குள் வர வேண்டும். முன்கூட்டியே விண்ணப்பித்து இருந்தாலும், தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மேலும் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என்றார்.