சிவில் சர்வீஸ் தேர்வு பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு: ராஜ்நாத்சிங் | Kalvimalar - News

சிவில் சர்வீஸ் தேர்வு பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு: ராஜ்நாத்சிங்ஜூலை 29,2014,17:23 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: "மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி.,யின் சிவில் சர்வீஸ் தேர்வு பிரச்னை, ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும்" என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உறுதி அளித்துள்ளார்.

யு.பி.எஸ்.சி., அமைப்பு: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., நடத்துகிறது. இந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகளில், CSAT என அழைக்கப்படும் திறனறி தேர்வு, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், இந்தத் தேர்வு, ஆங்கில மொழி புலமை உள்ளவர்களுக்கு சாதகமானது; மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்தது. அதனால், இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அடுத்த மாதம், 24ம் தேதி நடக்கவிருந்த திறனறி தேர்வை நிறுத்தி வைக்கும்படி, யு.பி.எஸ்.சி.,யை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

நுழைவுச்சீட்டுகள்: இந்நிலையில், அடுத்த மாதம், 24ம் தேதி நடைபெறும் திறனறி தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பிரச்னையால் எரிச்சல் அடைந்த மாணவர்கள், டில்லியில், யு.பி.எஸ்.சி., அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.

இந்தச் சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: யு.பி.எஸ்.சி.,யின் சிவில் சர்வீஸ் தேர்வு பிரச்னை குறித்து நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோருடன், ஆலோசனை நடத்தி உள்ளேன். அதனால், ஒரு வாரத்திற்குள் இந்தப் பிரச்னை தீர்க்கப்படும். சிவில் சர்வீஸ் திறனறி தேர்வு குறித்து, ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட மூன்று பேர் குழுவும், விரைவில் அறிக்கை சமர்ப்பித்து விடும்.

அதே நேரத்தில், அடுத்த மாதம் 24ம் தேதி நடக்க உள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து, என்னால் எதுவும் தெரிவிக்க இயலாது. இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ராகுலுடன் சந்திப்பு: இதற்கிடையில், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களில் ஒரு குழுவினர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினர். அப்போது, திறனறி தேர்வால் ஆங்கிலப் புலமை இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விவரித்தனர்.

இதையடுத்து, அவர்களிடம் பேசிய ராகுல், "சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது. உங்கள் பிரச்னைகளை உரிய அமைப்புகளில் நான் எழுப்புவேன். காங்கிரஸ் எப்போதும் மாணவர்கள் பக்கமே. ஏழை குடும்ப மாணவர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்" என உறுதி அளித்தார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us