சென்னை: ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் மூன்று ஆண்டுகளாக அல்லாடி வரும் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியரை பணி நிரந்தரம் செய்து, முறையான சம்பளம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின் மாநில அமைப்பாளர் சேசுராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2011ல் 16,549 பகுதி நேர ஆசிரியரை நியமனம் செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.
ஓவியம், தையல், உடற்கல்வி என பல பிரிவுகளின் கீழ் வாரத்திற்கு மூன்று நாள் வேலை, மாதம் 5,000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இந்த காலத்தில் 5,000 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?
வருத்தமாக உள்ளது
இது தமிழக அரசுக்கு தெரியாத விஷயம் கிடையாது. ஆனாலும் எங்களின் பிரச்னையை இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. இந்த குறைந்த சம்பளத்திற்கு ஏராளமான ஆசிரியர் 100 கி.மீ. முதல் 150 கி.மீ. தூரம் வரை பயணிக்கின்றனர்.
வாங்கும் சம்பளத்தில் பாதித் தொகை பஸ் செலவிற்கே போய்விடுகிறது. மீதியுள்ள சம்பளத்தை வைத்து குடும்பத்தை ஓட்ட முடியாமல் அல்லாடி வருகிறோம். தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, சிறப்பு தேர்வு நடத்தி பணிவரன் முறை செய்து தமிழக அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல் எங்களுக்கும் சிறப்பு தேர்வை நடத்தி முறையான சம்பளத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
மற்ற ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் பெற கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நாங்கள் பணியிட மாறுதலுக்கு வாய்ப்பே இல்லாமல் மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறோம். பலரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எங்களது பிரச்னையை தீர்க்க முதல்வர் முன் வர வேண்டும். இவ்வாறு சேசுராஜா தெரிவித்தார்.