கிழக்கு ஆசியாவின், பெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்கும், தென் கொரியா, தரம் மிக்க உயர் கல்வியை வழங்கும் நாடாக உருவெடுத்து வருகிறது!
அறிவியல், பொறியியல், கலை, அறிவியல், பயோ டெக்னாலஜி, நேனோ சயின்ஸ், ஸ்பேஸ் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெடிக்கல் சயின்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பாடத்திட்டங்களை வடிவமைத்தது, தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வகுப்பறை மற்றும் ஆய்வுக்கூட வசதிகளை, தென் கொரிய கல்வி நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.
இங்கு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆய்வக வழி கல்வி முறையில் மாணவர்கள் படிப்பதால், துறைகளுக்கு ஏற்றவாறு தங்களது நுண்ணறிவினை திறம்பட செயலாற்றிட செய்ய இயலும். அதனால், படித்து முடித்தவுடன் வேலை பெறுவது எளிதாகிறது.
சிறப்பம்சம்
மானுடவியல், இயற்கை அறிவியல், வேளாண்மை மற்றும் வாழ்க்கை அறிவியல், வியாபார நிர்வாகம், கல்வியியல், சட்டம், இசை, மனித சூழலியல், இசை, மருந்தியல், நர்சிங், கால்நடை மருத்துவம், கலை அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மற்றும் பட்டயப்படிப்புகளை தென் கொரிய கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
உதவித்தொகை
அரசாங்க கல்வி நிதி உதவித்தொகை திட்டத்தின் கீழ், பட்டப்படிப்பு படிக்கும் சிறந்த 870 மாணவர்களுக்கு, விமானக் கட்டணம், இதர செலவினங்களுக்கு மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 11 ஆயிரத்து 300 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், கலை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் சிறந்த மதிப்பெண் பெற்று, பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, செமஸ்டருக்கு 11 ஆயிரம் ரூபாயும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பில் புத்தாக்க திறன் கொண்ட மாணவர்களுக்கு, செமஸ்டருக்கு 13 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
முன்னணி கல்வி நிறுவனங்கள்
பொறியியல், மருத்துவம், மேலாண்மை, அறிவியல் மட்டுமல்லாமல், கலைத்துறையிலும் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள், சியோல் தேசிய பல்கலைக்கழகம், கொரியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், போஹங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கொரியா பல்கலைக்கழகம், சங்குவான் பல்கலைக்கழகம், பாக்ஸோக் பல்கலைக்கழகம், ஹாங்கிக் பல்கலைக்கழகம் சோன்புக் தேசிய பல்கலைக்கழகம், டாகு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் சுங்க்யூன்க்வென் பல்கலைக்கழகம் ஆகும். கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.