தனக்கான பணியையும், துறையையும் தேர்வு செய்தல் | Kalvimalar - News

தனக்கான பணியையும், துறையையும் தேர்வு செய்தல்ஏப்ரல் 25,2014,09:59 IST

எழுத்தின் அளவு :

ஒரு மாணவர் தனக்கான எதிர்கால துறையை தேர்வுசெய்வது குறித்து பல கட்டுக்கதைகள் உள்ளன. எனவே, கீழ்வரும் விஷயங்களை நன்குப் படித்து ஒரு தெளிவான முடிவுக்கு வரவும்.

கட்டுக்கதை என்பது, ஒரு கதை அல்லது ஒரு தனிமனிதனின் புரிந்துணர்வு அல்லது ஒரு குழுவின் புரிந்துணர்வு ஆகியன தொடர்பாக இருக்கலாம். இவை உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம். பொதுவாக, கட்டுக்கதைகள் என்பவை, வலுவான ஆதாரங்களோ, அறிவுப்பூர்வமான விளக்கங்களோ இல்லாது, மனிதனால் உருவாக்கப்பட்ட பழமையானவை. எனவே, இந்த வகையில், பணி வாய்ப்புகள் மற்றும் படிப்புகள் குறித்தும் பல கட்டுக்கதைகள் சமூகத்தில் உலா வருகின்றன.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர், பணித் தேடுதல் மற்றும் தேர்வு செய்தல் தொடர்பான தர்க்கரீதியான, பகுத்தறிவு ரீதியிலான தெளிவைப் பெற, சில கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் குறித்து இங்கே அலசப்படுகிறது.

கட்டுக்கதை 1 - எனது நண்பர்கள் எதில் இருக்கிறார்களோ, நானும் அதிலேயே இருக்க வேண்டும்.

உண்மைநிலை - நண்பர்கள் எப்போதுமே உங்களுடனேயே இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ, அதையே பின்பற்ற வேண்டுமென்பது அதன் அர்த்தமல்ல. உங்களுக்கு எது சரிவரும் என்பதை ஆய்வுசெய்து அதைத்தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டுமேயொழிய, உங்களின் நண்பர்களுக்குப் பொருத்தமானது எது என்பதையல்ல. ஒரு குறிப்பிட்ட பாடத்தை தேர்வு செய்யும்படி, உங்களுக்கு, நண்பர்களிடமிருந்து அழுத்தம் வரலாம். ஆனால், இது உங்களின் எதிர்காலம் என்பதால், உங்களின் விருப்பத்திற்கே நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கட்டுக்கதை 2 - எனது வலுவான திறன்கள் அடிப்படையில் நான் எனக்கான வருங்காலத் துறையை தேர்வு செய்ய வேண்டுமா?

உண்மைநிலை - பணியைத் தேர்வு செய்வதில் திறன்களுக்கு முக்கியப் பங்குண்டு. அதேசமயம், உங்களின் ஆளுமை, ஆர்வம், உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது, உங்களுக்கான திருப்தி ஆகியவையும் சம முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு விஷயத்தை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்பதற்காகவே, அதில் நீங்கள் திருப்தியடைவீர்கள் என்று அர்த்தமல்ல.

கட்டுக்கதை 3 - எனக்கென்று மிகப் பொருத்தமான() ஒரு தொழில்துறை இருக்கிறதா?

உண்மைநிலை எந்தவொரு தனிமனிதனுக்கும் ஏற்ற, ஒரு மிகப் பொருத்தமான தொழில்துறை என்று எதுவுமில்லை. உண்மையில், ஒரு தனிமனிதர், பலவிதமான வேலைகளை செய்யும் திறமையைப் பெற்றிருப்பார் மற்றும் அவர் எதை விரும்புகிறாரோ மற்றும் சந்தோஷமாக உணர்கிறாரோ, அதை மீண்டும் மீண்டும் செய்கிறார். ஒருவர் தனக்கான வாய்ப்புகளை எப்போதுமே திறந்து வைத்திருக்க வேண்டும்.

ஏனெனில், எதிர்கால போக்குகள் என்பவை நிச்சயமற்றவை. இன்று உங்களுக்கு பிடிக்கும் ஒரு விஷயம், எதிர்காலத்தில் பிடிக்காமல் போகலாம் மற்றும் இன்று உங்களுக்குப் பிடிக்காமல் இருப்பவை, வருங்காலத்தில் பிடிக்கலாம். எனவே, ஒரே விஷயத்தை பிடிவாதமாக பற்றிக் கொண்டிராமல், எப்போதுமே ஒரு மாற்று அம்சத்தை கையில் வைத்துக் கொள்ளவும்.

உதாரணமாக, நான் ஒரு மருத்துவராக வர வேண்டும் என்று நினைப்பதற்கு மாற்றாக, நான் மருத்துவத் துறையில் ஈடுபட்டு சிறக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். பல புத்திசாலி மனிதர்கள், தங்களுக்கான வாய்ப்புகளை மிக கவனமாக தேர்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுக்கதை 4 - நான் எனது வாழ்நாளில் ஒரேயொரு தொழில் வாய்ப்பையே பெறுவேன்

உண்மைநிலை - மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது என்பது உலக மாமேதை மார்க்சின் புகழ் மொழி. பணி திட்டமிடுதல் என்பது, எப்போதுமே முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் ஒரு விஷயமாகும். வாய்ப்புகளுக்கான உங்களின் ஜன்னலை, நீங்கள் புத்துணர்வூட்டி, மறு சிந்தனை செய்து, மறு வடிவமைப்பு செய்ய வேண்டும்.

இன்றைக்கு பசுமையாக காட்சித்தரும் ஒரு துறை, நாளையே பாலைவனமாகவே இருக்கும். இந்த உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய பணி வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே உள்ளன. யாராலும், ஒரு சூழலில் 100% மிகச் சரியான முடிவை எடுத்துவிட முடியாது.

கட்டுக்கதை 5 - நான் அதிககாலம் காத்திருந்தால், சரியான படிப்பிற்கான வாய்ப்பு என்னைத் தேடி வருமா?

உண்மைநிலை - சரியான திட்டமிடுதலே, ஒருவர் தனக்கு ஏற்ற படிப்பையும், தொழில் துறையையும் தேர்வு செய்ய உதவும். நீங்கள் உங்களுக்கு ஏற்ற தொழில்துறையை, ஏதோவொரு குருட்டு வாய்ப்பில் தேர்வு செய்துவிட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த உலகில் வெற்றிபெற்ற ஒவ்வொருவரும், தங்களுக்கான தொழில்துறையை தேர்வுசெய்ய கவனமாக திட்டமிட்டு, அதை அடைய கடினமாக உழைத்து வந்தவர்களேயாவர். இதன்மூலமே அவர்கள் வெற்றியை அடைந்தார்கள். உங்களைச் சுற்றியுள்ள மக்களைப் பாருங்கள். பலபேர் ஏதோ கிடைத்த வாய்ப்பில் விழுந்து, தங்கள் தொழிலின் மீது ஆர்வமின்றி, வாழ்க்கையில் விரக்தியோடு இருப்பதை காண்பீர்கள். அந்த நிலை உங்களுக்கும் வேண்டாம்.

கட்டுக்கதை 6 - எனக்கு ---- துறை மிகவும் பொருத்தமான ஒன்று என நினைக்கிறேன். ஏனெனில், அத்துறையில்தான் நல்ல பயிற்சிபெற்ற மற்றும் தகுதியுள்ள நபர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது.

உண்மைநிலை - வேலை வாய்ப்பு சந்தை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. பொருளாதார நிலை மாறுபாடுகள், தொழில்நுட்பத் துறை வளர்ச்சி மற்றும் பணியாளர் வளம் ஆகியவற்றைப் பொறுத்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஒரே பணிக்கு எப்போதுமே டிமான்ட் இருந்துகொண்டே இருக்காது.

உதாரணமாக பார்த்தால், இன்றைய நிலையில் நல்ல தகுதியுள்ள நர்சுகளுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் இன்றைய நிலையில் சிறப்பாக கிடைக்கின்றன. ஆனால், இதேநிலை சில வருடங்கள் கழித்து இப்படியே இருக்காது. தற்போது பள்ளிப் படிப்பை முடிக்கும் நீங்கள், நர்சு வேலை சிறப்பானது என்று நினைத்து, அந்தப் படிப்பை படித்து வெளிவரும்போது, உங்களைப் போல் நினைத்து அப்படிப்பை மேற்கொண்டு, உங்களோடு சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் வெளிவருவார்கள்.

இதன்மூலம், தேவைப்படும் நர்சுகளைவிட, மிக அதிகளவிலான நர்சிங் பட்டதாரிகள் உருவாகி விடுகிறார்கள். எனவே, அப்போது நிலைமை என்னவாகும்? இந்த நிலைதான் ஒவ்வொரு துறைக்கும். ஒரு துறைக்கு, ஒரு காலகட்டத்தில் இருக்கும் டிமான்ட், அடுத்த சில வருடங்களில் இருக்காது. நிலைமை அப்படியே தலைகீழாகிவிடும்.

கட்டுக்கதை 7 - நான் பிற்காலத்தில் என்னவாக இருப்பேன் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வகையில் ஏதேனும் சோதனை முறை உள்ளதா?

உண்மைநிலை - உங்களின் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்பதை சரியாக சொல்லக்கூடிய எந்த சோதனை முறையும் இல்லை. அதேசமயம் Career Test அல்லது Aptitude Test எனப்படுபவை, உங்களின் கேரியர் பிளானிங் நடவடிக்கையில் உதவி புரிகிறதே ஒழிய, அதை வைத்தே அனைத்தையும் மதிப்பிட்டுவிட முடியாது. எனவே, Career Interest Test அல்லது Psychological Test ஆகியவை, உங்களின் துறையை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குமே தவிர, அதை வைத்தே அனைத்தையும் முடிவுசெய்துவிட முடியாது.

என்னுடைய நண்பர்களும், குடும்பமும் என்னைப் பற்றி அறிவார்கள். அவர்கள், எனக்கான பொருத்தமான தொழில்துறையைத் தேர்ந்தெடுக்க உதவி புரிவார்களா?

உண்மைநிலை - உங்களுக்கு எது சிறந்தது என்பதை நீங்கள் மட்டுமே முடிவுசெய்ய முடியும். உங்களுக்கு இது சிறந்தது என்று மற்றவர்கள் கூறுவது, உங்களைப் பற்றிய அவர்களுடைய மதிப்பீட்டின் பிரதிபலிப்பே தவிர, அது உங்களுடையதல்ல. உங்களைப் பெற்று வளர்த்த உங்களின் பெற்றோர்களாலேயே, உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களை புரிந்துகொள்ள முடிவதில்லை. மேலும், நீங்கள் வருடமெல்லாம் இணைபிரியாதிருந்த உங்களுடைய நண்பர்களாலும் உங்களுக்கு தேவையான அம்சத்தை சரியாக மதிப்பிட்டு விட முடியாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

கட்டுக்கதை 10 - நான் இதை தேர்வுசெய்து படித்தால் சரியாக இருக்கும் என்று அறுதியிட்டு கூறும் வகையில் யாரேனும் ஒரு நிபுணர் இருக்கிறாரா?

உண்மைநிலை - உங்களுக்கான நிபுணர் நீங்களே. உங்களின் பெற்றோர்களோ, ஆசிரியர்களோ அல்லது ஆலோசகர்களோ, உங்களின் திட்டமிடுதல் செயல்பாட்டிற்குத்தான் உதவ முடியுமே தவிர, உங்களுக்கான சிறந்த தேர்வை நீங்கள்தான் அமைத்துக் கொள்ள முடியும்.

கட்டுக்கதை 11 - வாழ்க்கை என்பது எப்போதும் சந்தோஷம் நிறைந்தது. வாழ்க்கை என்பது எப்போதும் துன்பம் நிறைந்தது.

உண்மைநிலை - மேற்கூறிய இரண்டுமே அல்ல. சந்தோஷமும், துக்கமும் மாறிமாறி வருவதே வாழ்க்கை. ஆனால், நம்முடைய திட்டமிடுதல் மற்றுபுத்திசாலித்தனத்தின் மூலமாக, துன்பத்தைக் குறைத்து, இன்பத்தை அதிகரிக்கலாம். வாழக்கையின் துன்பமான நேரங்களில், வாழ்க்கையின் இன்னொரு அம்சத்தைப் பற்றி நீங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது. அதன்மூலம், அந்த துன்பம் மீண்டும் நேராமல் பார்த்துக் கொள்ளலாம்.

கட்டுக்கதை 12 - நான் தேர்வுசெய்யும் ஒரு உயர்கல்விப் படிப்பு, என்னை நேரடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு இட்டுச் செல்கிறது. எனவே, நான் சரியான ஸ்பெஷலைசேஷனை தேர்வு செய்யவில்லை எனில், தவறான துறையில் நான் நுழைந்து விடுவேனா?

உண்மைநிலை - வேலை வழங்கும் பல நிறுவனங்கள், ஒருவர் என்ன ஸ்பெஷலைசேஷன் படித்திருக்கிறார் என்பதைவிட, அவர் சேரவிருக்கும் பணி தொடர்பான எந்தளவு அனுபவம் பெற்றிருக்கிறார்(பகுதிநேர பணிகள், இன்டர்ன்ஷிப் மற்றும் கூட்டுறவு) என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன.

ஒரு மேஜர் பாடம், பலவிதமான துறைகளுக்கு இட்டுச் செல்லும் மற்றும் ஒரு துறையானது, பல மேஜர் பாடங்களைப் படிப்பதன் மூலமே அடையப்பட முடியும். இன்றைய நிலையில், பல நபர்கள், தாங்கள் படித்த மேஜர் பாடத்திற்கு சம்பந்தமே இல்லாத பணியைத்தான் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பது நடைமுறை உண்மை.

கட்டுக்கதை 13 - சாதாரணமாக, கலை மற்றும் அறிவியல் படிப்புகளைப் படித்தால், எனக்கு பணி வாய்ப்புகள் கிடைக்காதே!

உண்மைநிலை - கடந்த 1990ம் ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.டி., துறை முக்கியத்துவம் பெற்றது. பள்ளிப் படிப்பை முடித்து, மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வம் காட்டும் மாணவர்கள், கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளை உதாசீனம் செய்யத் தொடங்கினார்கள். போதிய வசதியில்லாத மற்றும் தேவையான மதிப்பெண்களை எடுக்காதவர்கள் மட்டுமே, கலை, அறிவியல் படிப்புகளை நோக்கி வந்தார்கள்.

கலை மற்றும் அறிவியல் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், எழுதுதல், ஆராய்ச்சி, படைப்பாக்க சிந்தனை மற்றும் நுணுக்க சிந்தனை ஆகியவற்றில் பயிற்சி எடுக்க வேண்டும். இவை, பரிமாற்ற திறன்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, ஒரு பிரிவில் கற்றுக்கொள்ளும் திறனை, இன்னொரு பிரிவுக்கு பரிமாற்றம் செய்ய முடியும்.

லிபரல் ஆர்ட்ஸ் பிரிவில் ஒருவர் கற்றுக்கொள்ளும் திறன், பல நிறுவனங்களால் விரும்பப்படுகின்றன. கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள், பல்வேறான துறைகளில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக கூற வேண்டுமெனில், ஐ.டி., தொழில்துறையில், பி.எஸ்சி., பி.ஏ., மற்றும் பி.காம்., முடித்த பட்டதாரிகள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us