"மொத்தம், 3,000 பேர் பங்கேற்ற போட்டித் தேர்வை எதிர்கொண்டு, தேர்வு பெற்றும், நான்கு ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். தி.மு.க., ஆட்சியில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதற்காக எங்களை பலிகடாவாக்கி விட்டனர்" என, அண்ணா நூற்றாண்டு நூலக ஊழியர் நலச்சங்க பொதுச் செயலர் மணிகண்டன் தெரிவித்தார்.
சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் 2010ல் திறக்கப்பட்டது. உலக அளவில் தரமான நூலகமாக திகழ வேண்டும் என்பதற்காக, 165 கோடி ரூபாய் செலவில், பல அம்சங்களுடன் நூலகம் திறக்கப்பட்டது. பின், 200 அலுவலர்களை நியமனம் செய்ய திட்டமிட்டு முதல் கட்டமாக 45 நாட்களில் போட்டித்தேர்வு நடத்தி அதில் 97 பேர் அண்ணா நூலகத்திற்காக தேர்வு செய்யப்பட்டனர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் "அண்ணா நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும்" என, அறிவிக்கப்பட்டது. நூலகம் வழக்கில் சிக்கியிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதில் பணியாற்றும் 97 பேரும் அரசு ஊழியர் என்ற அங்கீகாரத்தை பெறாமல் நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். "இனியும் காத்திருந்தால், எதிர்காலம் பாழாகி விடும்" என பயந்து 20க்கும் மேற்பட்டோர் வேறு போட்டித் தேர்வுகளை எழுதி வேறு துறைகளுக்கு சென்றுவிட்டனர். இப்போது 70 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.
பள்ளி கல்வி துறைக்கு வந்து செல்லும் அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும், நேரிலும், தபால் மூலமாகவும், கோரிக்கைகளை சொல்லிச் சொல்லி களைத்த நிலையில் அண்ணா நூற்றாண்டு நூலக ஊழியர் நலச்சங்க பொதுச் செயலர் மணிகண்டன் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதாலேயே எங்களை சுற்றிச் சுற்றி அடிப்பதாக உணர்கிறோம். நாங்கள், எந்த குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கிடையாது. அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். வேலை தேடும் பல லட்சம் இளைஞர்களில் நாங்களும் ஒருவராகத்தான் போட்டித்தேர்வை எழுதி தேர்வு பெற்றோம். அரசியலுக்காக தேவையில்லாமல் நான்கு ஆண்டுகளாக எங்களை நோகடிக்கின்றனர்.
இதுவரை, பணி பதிவேடு கூட ஆரம்பிக்கவில்லை. கோர்ட் தான் வழி. பள்ளி கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை முதன்மை செயலர், இயக்குனர் என, அனைவரிடமும் பேசிவிட்டோம். இதுவரை விடிவு கிடைக்கவில்லை. நாங்கள், அரசியல் பலிகடா ஆக்கப்பட்டதாகவே உணர்கிறோம். தீர்வு கிடைக்காவிட்டால், கோர்ட்டுக்கு செல்வதைத் தவிர, வேறு வழியில்லை. இவ்வாறு, மணிகண்டன் கூறினார்.