நுழைவு தேர்வு மூலம் பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு அரசுப் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு | Kalvimalar - News

நுழைவு தேர்வு மூலம் பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு அரசுப் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவுஏப்ரல் 22,2014,09:59 IST

எழுத்தின் அளவு :

சென்னை: "பட்டப் படிப்பு முடிக்காமல் திறந்தவெளி பல்கலை மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்களை அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்காதது சரியே; ஆனால், நுழைவுத் தேர்வுக்குப் பின், பட்டப் படிப்பு முடித்தவர்கள், அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உரிமை உள்ளது" என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முறையான கல்வித் தகுதி பெறவில்லை

குரூப் - 2 பணிகளுக்கான அறிவிப்பு 2008ல் வெளியிடப்பட்டது. தேர்வு முடிந்த பின், சிலருக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அவர்கள், "முறையான கல்வித் தகுதி பெறவில்லை" என, காரணம் கூறப்பட்டது. பட்டப் படிப்பு முடிக்காமல் திறந்தவெளி பல்கலை மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள்; பிளஸ் 2 முடிக்காமல், நுழைவுத் தேர்வு மூலம் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு குரூப் - 2 தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் - ஜெனரல் கோமதிநாயகம், சிறப்பு அரசு பிளீடர் வி.சுப்பையா, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், வழக்கறிஞர் நிறைமதி ஆஜராகினர்.

மனுக்களை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:

நிராகரிக்க முடியும்

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் - ஜெனரல், "அடிப்படை பட்டப் படிப்பு இல்லாமல் திறந்தவெளி பல்கலை மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியும். அதேபோல் பிளஸ் 2 முடிக்காமல் பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்களையும் 2009ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி நிராகரிக்க முடியும்" என வாதிட்டார்.

"பட்டப் படிப்பு இல்லாமல், திறந்தவெளி பல்கலை மூலம் முதுகலை பட்டம் பெறுவது செல்லாது" என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அதன்படி, பட்டப் படிப்பு இல்லாமல் முதுகலை பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும் என்ற கூடுதல் அட்வகேட் - ஜெனரல் டி.என்.பி.எஸ்.சி., தரப்பு வழக்கறிஞரின் வாதம் சரிதான். பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, "பிளஸ் 2 முடிக்காதவர்கள் கூட பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால், அவர்களை பட்டப் படிப்பில் சேர்க்கலாம்" என, கூறப்பட்டுள்ளது. அரசாணையின் அடிப்படையில், பட்டப் படிப்பு செல்லுமா என சோதிக்க முடியாது. யு.ஜி.சி., விதிமுறைகளின்படி தான், சோதிக்க முடியும்.

நியமனம் வழங்க வேண்டும்

எனவே, நுழைவுத் தேர்வு மூலம் பட்டப் படிப்பு முடித்தவர்கள் குரூப் - 2 பணிகளுக்கு தேர்வு பெற உரிமை உள்ளது. அவர்களுக்கு,நியமனம் வழங்க வேண்டும். பட்டப் படிப்பு முடிக்காமல் திறந்தவெளி பல்கலை மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது சரி. நுழைவுத் தேர்வு எழுதி பட்டப் படிப்பு முடித்தவர்கள் அசல் சான்றிதழ்களை ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிடலாம். பின், அந்த சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்கலாம். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us