ஆசிரியர்களுக்கு அதிக விடைத்தாள் திருத்தும் பணி: மாணவர் நலன் பாதிக்கும் அபாயம் | Kalvimalar - News

ஆசிரியர்களுக்கு அதிக விடைத்தாள் திருத்தும் பணி: மாணவர் நலன் பாதிக்கும் அபாயம்ஏப்ரல் 21,2014,10:10 IST

எழுத்தின் அளவு :

கோவை: "தேர்தல் அவசரத்தால் நாள் ஒன்றுக்கு அதிக விடைத்தாள்களை திருத்த கட்டாயப்படுத்த வேண்டாம். ஒரு ஆசிரியர் 30 விடைத்தாள் திருத்தினால் போதுமானது; 45 விடைத்தாள்களை திணிக்க வேண்டாம்" என, பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் மார்ச் 26 முதல் ஏப்., 9 வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்ததன. தொடர்ந்து 10ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் அல்வேனியா பள்ளியில் விடைத்தாள் திருத்தும் முகாம் நடந்துவருகிறது; 1800 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில் தேர்தல் மற்றும் தேர்வுப் பணிகள் ஒரே சமயத்தில் நடந்துவருவதால், இப்பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். ஒரே நாளில், விடைத்தாள் திருத்தும் முகாம், தேர்தல் பயிற்சி இரண்டிலும் ஈடுபடவேண்டிய சூழல் எழுந்தது. இதனால், விடைத்தாள் திருத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டு 22ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

தேர்தலை முன்னிட்டு 23ம் தேதி முதல் ஆசிரியர்கள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளதால், விடைத்தாள் திருத்தும் பணிகள் 22ம் தேதிக்குள் முடிக்கும் கட்டாயம் அரசு தேர்வுத்துறைக்கு எழுந்துள்ளது. இதனால், விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆசிரியர், நாள் ஒன்றுக்கு இரண்டு பிரிவுகளில் தலா 15 வீதம் மொத்தம் 30 விடைத்தாள்களை மட்டுமே திருத்தவேண்டும். அதை தவிர்த்து அதிக, விடைத்தாள் திருத்தும்பட்சத்தில் கவனக்குறைவால் பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

இந்நிலையில், நாளையுடன் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் முகாம் நிறைவடைவதால், மீதம் உள்ள விடைத்தாள்களை விரைந்து முடிக்க நாள் ஒன்றுக்கு ஆசிரியர்களுக்கு 45 விடைத்தாள்கள் திருத்துவதற்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "சில ஆசிரியர்கள் 45 விடைத்தாள்களை கடந்த இரண்டு நாட்களாக திருத்துகிறோம். 30 விடைத்தாள்கள் திருத்துவதே சரியாக இருக்கும்" என்றார்.

மாவட்ட கல்வி அலுவலர் கன்னிகா கூறுகையில், "தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் சென்றதால், அவர்கள் விருப்பத்தின்படி சில ஆசிரியர்களுக்கு 45 விடைத்தாள்கள் வழங்கப்பட்டன. எவரையும் கட்டாயப்படுத்தவில்லை. மேலும், இரவு 8.00 மணி வரை முகாம் நடைபெறுகிறது. மிகுந்த கவனத்துடன் விடைத்தாள்கள் சரிபார்க்கப்பட்ட பின்பே மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. நாளையுடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, மதிப்பெண்கள் பதிவு செய்யப்படும்" என்றார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us