ப்ளூ காலர் பணிகள் என்ற வகையின் கீழ் வரும் பணிகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே, தங்களின் பிள்ளைகள் வாழ்க்கையில் சுகமாக இருக்க முடியும் என்று பெற்றோர் நினைக்கின்றனர். அதன்மூலமே, அவர்கள் சமூகத்தில் மரியாதை மற்றும் மதிப்பை பெற முடியும் என்றும் நினைக்கின்றனர்.
ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. இளைய தலைமுறையினரின் பணி தேர்வு வித்தியாசமானதாக இருக்கிறது. அவர்கள், புதிய அனுபவங்களையும், கிளர்ச்சிகளையும் தரும் பணிகளைத் தேடி செல்கிறார்கள். அதன்மூலம், வருமானம் மற்றும் சமூக மதிப்பு அம்சங்களிலும் உயர்நிலையை அடைகிறார்கள்.
இக்கட்டுரையில், சில புதுமையான மற்றும் ரசனையூட்டும் பணி வாய்ப்புகளையும், அதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்க்கவுள்ளோம்.
கார்டூனிஸ்ட்
கார்டூன் வரையும் திறமையுள்ள சில மாணவர்கள், தங்களின் பள்ளிப் பாடப்புத்தகம் அல்லது நோட்டுப் புத்தகத்தின் பின்பக்கத்தில், தங்களுக்குப் பிடிக்காத ஆசிரியரின் கார்டூனை வரையும் பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களை, நாமும் பார்த்திருப்போம். இதை, ஆசிரியர்களோ அல்லது பெற்றோரோ ரசிக்காமல் போகலாம். ஆனால், இது ஒரு படைப்புத்திறன். நண்பர்களால், நிச்சயம் இது பாராட்டப்படும்.
ஒரு கார்டூனை உங்களால் சுயமாகவே வரைய முடிந்தால், உண்மையில், அத்துறையில் நீங்கள் அமோகமாக சாதிக்கலாம். இன்றைய சந்தையில், பல காமிக்ஸ் புத்தகங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. எனவே, அவற்றுக்கு சிறந்த கார்டூனிஸ்டுகள் தேவைப்படுகிறார்கள்.
காமிக்ஸ் மட்டுமல்ல. எப்போதுமே, பத்திரிகை துறையில் கார்டூனிஸ்ட்டுகளுக்கான மரியாதையே தனி. கார்ட்டூன்களுக்காகவே, பத்திரிகைகளை வாங்குவோர் பலர் உண்டு. பத்திரிகை கார்ட்டூன்கள் ஒருவரின் புகழை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதை மறக்கலாகாது.
எனவே, உங்களின் திறமையை தகுந்த இடத்தில், சரியான முறையில் வெளிப்படுத்த உங்களால் முடிந்தால், உங்களின் அபாரமான வளர்ச்சியை யாராலும் எட்ட முடியாது.
டட்டூ ஆர்டிஸ்ட்(Tattoo Artist)
உடலில் ஓவியம் வரையும் இந்த வகை கலை இன்றைய நிலையில் பெரியளவில் பிரபலமடைந்து வருகிறது. முந்தைய நாட்களில், சமூகத்தில், உடலில் ஓவியம் வரையும் இந்த கலை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. டட்டூ கலைஞர்கள், தங்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்துவதற்கான நல்ல ஒரு அடித்தளத்தை இன்று பெற்று வருகிறார்கள். அவர்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
நடிகர் அக்ஷய்குமார், சயிப் அலி கான், கிறிஸ்டினா ரிசி அல்லது டுவைனே ஜான்சன் போன்ற பிரபலங்கள், தங்களின் உடலில் டட்டூ ஓவியத்தை வரைந்து கொண்டுள்ளனர். பங் பாங், ஜானி ஓபினா உள்ளிட்ட பல பிரபல டட்டூ கலைஞர்கள் உள்ளனர். அவர்கள், பல பிரபலங்களின் உடலில் டட்டூ ஓவியத்தை வரைந்துள்ளார்கள் மற்றும் வரைந்து வருகிறார்கள். எனவே, ஏதேனும் சுவாரஸ்யமான பணியை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள், இத்துறையையும் தேர்வு செய்யலாம்.
போட்டோகிராபர்
இதுவொரு பழைய துறைதான் என்றாலும், ஒரு நல்ல கலைஞனுக்கு, முற்றிலும் சுவாரஸ்யமும், சவாலும் நிறைந்த ஒன்று. ஒரு போட்டோகிராபர் செய்தித்தாளிலோ, பத்திரிகையிலோ அல்லது Freelancing முறையிலோ பணிபுரியலாம். ஆனால், ஒவ்வொரு முறையும், உங்களின் திறமையை இதன்மூலம் வெளிப்படுத்தலாம். தேவையான வருமானமும் ஈட்டலாம்.
ஒரு போட்டோகிராபர், தான் விரும்பும் வகையில் புகைப்படம் அமைய, பல நேரங்களில் அவர் வெளியேதான் அலைய வேண்டியுள்ளது. அவர் எந்தவகை போட்டோகிராபர் என்பதைப் பொறுத்து, அவர் செல்லும் இடங்கள் மாறுபடுகின்றன. வன விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் போட்டோகிராபர், காடுகளிலும், வேறு பல இயற்கை வெளிகளிலும் அலைகிறார்.
ஒரு போட்டோகிராபரின் பயணம் நீண்டது. ஒரு நல்ல புகைப்படம் ஒருவருக்கு கிடைக்க, அதிக பொறுமையும் அவசியம். நீங்கள் எடுத்த சிறந்த போட்டோக்களை இணையதளங்களில் விட்டு, அதன்மூலம் அவற்றை விற்பனை செய்யலாம். உங்களின் போட்டோக்களை பதிவிறக்கம் செய்வோர், அதற்கான பணத்தை உங்களுக்கு அளிப்பார்கள். எனவே, போட்டோகிராபியில் ஆர்வமுள்ளவர்கள், தயங்காமல் இத்துறையில் குதிக்கலாம்.
ஐஸ்கிரீம் சுவைத்தல்
ஐஸ்கிரீம் என்ற பெயரைக் கேட்டாலே போதும். வயது வித்தியாசமின்றி, ஆண் - பெண் என்ற வேற்றுமையின்றி, பலருக்கும் ஆசை வந்துவிடும். அதுவும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். ஐஸ்கிரீம் மீது அத்தனை அலாதி பிரியம் அவர்களுக்கு. எனவே, அதுசார்ந்த தொழில்துறையில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.
Tea Taster மற்றும் Wine Taster ஆகிய பணிகளின் வரிசையில், IceCream Taster என்பதும் ஒரு நல்ல பணி வாய்ப்பாகும். வேதியியல், உணவு அறிவியல் அல்லது வணிகம் ஆகிய துறைகள் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், அடிப்படையில் நல்ல சுவை மற்றும் மணம் அறியும் திறனும் பெற்றிருக்க வேண்டும். இதுவொரு சுவாரஸ்யமும், வருமானமும் நிறைந்த பணியாகும்.
அழகுக் கலை நிபுணர்
உலகில் உள்ள மக்களில், ஏறக்குறைய 99% பேருக்கு பிடித்த விஷயம் அழகு. இளமையும், அழகும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விரும்பாத மனிதன் யாருண்டு? பலர், வயது ஏறினாலும், பல பொருட்களை உபயோகித்து, தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் எப்போதும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
வீட்டிலேயே அழகுபடுத்திக் கொள்ளும் நிலை குறைந்து, கார்பரேட் உலகில், Beauty Parlour செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அழகுக் கலை பொருட்களின் சந்தை, உலகளவில் மிகவும் பெரியது. அதில் புரளும் பணம் மிக மிக அதிகம்.
இளம் வயதோ, முதியவரோ, ஆணோ அல்லது பெண்ணோ, தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அனைவருமே ஆர்வமுள்ளவர்கள்தான். பல கல்வி நிறுவனங்கள், அழகூட்டும் துறையில் பலவகையான படிப்புகளை வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. பல, இளைஞர்கள் இத்துறைக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். பிறரை அழகூட்டி, அதன்மூலம் அவரை திருப்திபட வைக்கும் ஒரு செயல், உண்மையில் சவாலும், சுவாரஸ்யமும் நிறைந்தது.
ஒரு சின்ன மாற்றம் தேவை,இங்கு ப்ளூ காலர் பணிகள் என்பதை வைட்(வெள்ளை) காலர் பணிகள் என மாற்றப்படவேண்டும்.ஏன் என்றால் ப்ளூ காலர் பணிகள் என்பவை உடல் உழைப்பை அதிகமாக கொண்டது.வைட் (வெள்ளை) காலர் பணிகள் தான் மூளைக்கு மட்டும் வேலை தரக்கூடியது.இன்று அணைத்து பெற்றோரும் எதிர்பார்ப்பது இம்மாதிரி-யான வேலைகள்தான்.
|
by subbu,India 2014-04-20 09:45:57 09:45:57 IST |