சென்னை: மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் அங்கீகாரம் பெறாத போலி கல்லூரிகளில் சேர்ந்து ஏமாற வேண்டாம்; பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும்" என தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 9ல் வெளியாக உள்ளது. இந்த முடிவுகள் வரும் முன்பே "தன் பிள்ளை எப்படியும் டாக்டராகி விட வேண்டும்" என்ற கனவுகளைச் சுமந்து கொண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கேட்டு பெற்றோர் பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு அலைகின்றனர். இதைப் பயன்படுத்தி தனியார் கல்லூரிகளில் இஷ்டம்போல் 75 லட்சம் ரூபாய் வரை விலை பேசப்படுகிறது.
கல்லூரி முறையான அங்கீகாரம் பெற்றுள்ளதா? எனக்கூட சரியாக கவனிக்காமல் "இடம் கிடைத்தால் போதும்" என போலி கல்லூரிகளில் இடம்பெற்று, பின் பெற்றோரும், மாணவரும் திண்டாடும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதற்கு திருவள்ளூர் டி.டி. மருத்துவக் கல்லூரி சரியான உதாரணம்.
இந்த கல்லூரியில் 2010 -11க்கு மட்டுமே இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து மாணவர்களை சேர்த்தது. கல்லூரி மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி கோர்ட்டுக்கு அலைகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை பதிவாளர் ஜான்சி சார்லஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் அதன் சார்புடைய படிப்புகளில் சேரும்போது மாணவரும், பெற்றோரும் விழிப்புடன் இருக்க வேண்டும். 2014-15ம் ஆண்டுக்கு முறையான அனுமதி பெற்றுள்ள கல்லூரிகளின் விவரப் பட்டியல் மத்திய கவுன்சில் மற்றும் பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தால் அதற்கு பல்கலை பொறுப்பல்ல. அங்கீகரிக்கப்படாத கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பல்கலை நடத்தும் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.