கட்டடவியல் கலைஞர் ஆக ஆசையா? | Kalvimalar - News

கட்டடவியல் கலைஞர் ஆக ஆசையா?மே 24,2016,18:00 IST

எழுத்தின் அளவு :

கலைநயமிக்க கட்டடங்களை மட்டுமின்றி, ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை வடிவமைத்து, ஒவ்வொரு பணியிலும் புதுமையை புகுத்தி, சிறந்த கட்டடவியல் கலைஞராக விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு தான் ‘நேஷ்னல் ஆப்டிடியுட் டெஸ்ட் இன் ஆர்க்கிடெக்சர்’!

ஐந்து ஆண்டுகள் கொண்ட பி.ஆர்க்., பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை எழுத வேண்டியது அவசியம்.

யார் எழுதலாம்?

பிளஸ் 2வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து, அதில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் இந்நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

லேட்டரல் என்ட்ரி மூலம் பி.ஆர்க்., பட்டப் படிப்பில் தொடர முடியாது என்பதை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

தேர்வு முறை

வரைதல் திறனறித்தேர்வு (டிராயிங் டெஸ்ட்): கொடுக்கப்பட்ட பொருளை வரையும் திறன், முப்பரிமாணம், இரு பரிமாணப் படங்கள் வரைதல், வண்ணங்களைப் பயன்படுத்துதல், ஒளி நிழலின் தாக்கத்துடன் வரைதல், அளவுகளைப் புரிந்துகொள்ளல் போன்ற பிரிவுகளில் மாணவர்களின் ஓவியத் திறன்கள் ஆராயப்படுகிறது. மாணவர்களின் விடைத்தாள்களை மூன்று பேர் அடங்கிய குழு தனித்தனியே மதிப்பீடு செய்து மதிப்பெண்களை வழங்குவதால் இந்நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் நன்கு திறன்பட பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம்.

கலை உணர்வு சோதனைத் தேர்வு (ஏஸ்தெட்டிக் சென்ஸிடிவிட்டி டெஸ்ட்): கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் இத்தேர்வு ‘அப்ஜெக்ட்டிவ்’ அடிப்படையில், அனலிட்டிக்கல் ரீசனிங், மென்டல் எபிலிட்டி, ஆர்க்கிடெக்ச்சுரல் அவேர்னஸ், இமாஜினேட்டிவ் காம்ப்ரிஹென்சன் போன்ற பல்வேறு பிரிவுகளில் மாணவர்களின் கலையுணர்வை சோதனை செய்யும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.

குறிப்பு: இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.

பி.ஆர்க்., சேர்க்கை முறை

நுழைவுத் தேர்வில் மாணவர்கள் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மதிப்பீடு செய்து கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு  ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களுக்கு மாணவர்களை சேர்க்க சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கவுன்சிலிங் நடத்துகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.nata.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us