பேக்கரி, பானங்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் பல ஆண்டுகளாக சாதாரண முறையில் பயன்படுத்தப்பட்டு வந்த பயோடெக்னாலஜி துறை இந்த நூற்றாண்டில் மிக வேகமாக வளரும் துறை என கணிக்கப்பட்டது. ஆனாலும் இத் துறையில் பட்டப்படிப்பு படிப்பவர்கள் பலருக்கும் ஐ.டி., போல சிறப்பான வேலை வாய்ப்பு கிடைப்பதென்பது அரிதாகவே இன்னமும் இருந்து வருவதை காண்கிறோம். பட்ட மேற்படிப்பு முடிப்பவர்கள் மற்றும் ஆய்வுப் பணியில் ஈடுபடுபவர்கள் நல்ல வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஜெனிடிக்ஸ், ஜெனிடிகல் இன்ஜினியரிங் போன்றவற்றில் நிகழ்ந்திருக்கும் முன்னேற்றங்களாலும் இத்துறை இன்று வேகமாக முன்னேறி வருகிறது. இதன் நவீன வடிவத்தில் இது ஒரு புதிய துறையாக இருப்பதால் இதன் வளர்ச்சி பல ஆண்டுகளுக்கு பிரமாண்டமாக இருக்கும் என்றே கருதுகிறார்கள். பிளஸ் 2வில் அறிவியல் படிப்பவர்கள் தான் இதற்கு செல்ல முடியும். மேற்படிப்புகளில் இன்ஜினியர்களும் சேர முடியும். உயிரியல், வேதியியல், இயற்பியல், விவசாயம் படித்திருப்போர் பட்டப்படிப்பில் சேரலாம். ஐ.ஐ.டி.,க்கள் நடத்தும் இன்டகரேடட் 5 ஆண்டு படிப்புகளும் இருக்கின்றன. நுழைவுத் தேர்வு மூலமாக இதில் சேரலாம். இத் துறையில் பட்ட மேற்படிப்புகள் எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.எஸ்சி., விவசாய பயோடெக்னாலஜி ஆகியவை உள்ளன. மிகப் பொறுமையான குணம், ஆய்வு மனப்பான்மை போன்றவை இதில் சேர விரும்புவோர் கட்டாயம் பெற்றிருக்க வேண்டிய குணம். அரசு ஆய்வகங்களிலும், பால்வள நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றில் சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. தமிழகத்தில் பயோடெக்னாலஜி படித்து முடிப்பவருக்கான வாய்ப்புகள் குறைவு தான்.