பரவலாக விரும்பப்படும் படிப்பாக உள்ள மாஸ் கம்யூனிகேஷன் படிப்பில், சேர்வதற்கான நுழைவுத் தேர்வு முறைகள் மற்றும் பிற தகுதிகள் குறித்து அறிதல் அவசியம்.
தகுதி
மாஸ் கம்யூனிகேஷன் படிப்பில் சேர, ஒரு மாணவர் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு
நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையிலேயே, பொதுவாக, சேர்க்கை நடைபெறுகிறது. சில கல்லூரிகள், குழு விவாதத்தையும் தனது மாணவர் சேர்க்கை செயல்பாட்டில் வைத்திருக்கும்.
தயாராதல்
நிகழ்கால உலகின் அரசியல், பொருளாதாரம், நடப்பு செய்திகள் மற்றும் விளையாட்டு ஆகியவைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். செய்தித் தாள்களின் எடிட்டோரியல் பகுதியை தெளிவாகப் படிக்க வேண்டும் மற்றும் வேறு பல செய்திகளையும் படிக்க வேண்டும். இதன்மூலம் ஒரு செய்தியை சிறப்பாக பகுப்பாய்வு செய்யும் திறன் உங்களுக்கு கிடைக்கும்.
எழுத்துத் தேர்வை எழுதுகையில், நீளமான பதில்களாக எழுதிக் கொண்டிருக்க வேண்டாம். முடிந்தளவு, 2 முதல் 3 குறுகிய பத்திகளாக பதில்களை எழுதவும். உங்களின் எண்ணத்தை தெளிவாகக் கூறி, அதற்கான ஆதாரங்களை அளிக்கவும். வளவளா கொளகொளா பதில்களால் போரடிக்க வேண்டாம். ஒரே கேள்விக்கு பதிலளிக்க அதிக நேரம் ஒதுக்க வேண்டாம். நேர மேலாண்மையை கடைபிடிக்கவும். சிறிய கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதவும்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்கையில், எக்காரணம் கொண்டும் தவறான தகவல்களை தந்துவிட வேண்டாம். பதில் தெரியவில்லை என்றே வெளிப்படையாக கூறி விடுங்கள். இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்ததற்கான உங்களின் சுய காரணத்தை தெளிவாக விளக்கி, அதன் நியாயத்தையும், அர்த்தத்தையும் புரிய வைக்க வேண்டும்.
கட்டணம்
இண்டர்ன்ஷிப் மற்றும் களப் பணிகள் இருப்பதால், படிப்பு கட்டணம் அதிகம். ஒரு வருடத்திற்கான கட்டணம் ரூ.60,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கும். அதேசமயம், IIMC போன்ற கல்லூரிகள், மாஸ் கம்யூனிகேஷன் படிப்பின் பல பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகைகளை வழங்குகின்றன.