புவனேஸ்வர்: பழங்குடியினத்தவர், தலித் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மாணவ, மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்கும் திட்டம், ஒடிசாவில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச லேப்-டாப் வழங்கி, முதல்வர், நவீன் பட்நாயக் பேசியதாவது:
"பிஜு யுவ ஷா- சக்திகரன் யோஜனா" என்ற இந்த திட்டத்தின் படி, மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது. அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் அனைவருக்கும், லேப்-டாப் வழங்கப்படும். எனினும் இந்த திட்டம், எஸ்.சி., - எஸ்.டி., பழங்குடியினர், தலித் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
மேலும் பெண்கள், இளம் பெண்கள், இடம்பெயர்ந்த இளைஞர்கள், சிறுபான்மையினத்தவர், பள்ளி செல்லாமல் இடை நின்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
எஸ்.சி., - எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் பெண்களுக்கு, ஆண்டுக்கு, 40 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.கல்வி மற்றும் பயிற்சியின் மூலம், தகுதித்திறனை வளர்ப்பது தான், இந்த கொள்கையின் நோக்கம்.
இளைஞர்களிடம் உள்ள தொழில் திறமையை கண்டறிந்து, அவற்றை வெளிக் கொண்டு வர, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.விளையாட்டு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு, 14 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், விளையாட்டுத் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். இவ்வாறு, நவீன் பட்நாயக் கூறினார்.