நாமக்கல்: ஜெனிவா மனித உரிமை கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில், கல்லூரி மாணவர்கள், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில், விடுதலைப் புலிகள் மற்றும் அந்நாட்டு ராணுவத்துக்கு இடையே நடந்த இறுதிக்கட்ட போரின் போது, அங்குள்ள தமிழ் மக்கள், கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இதுகுறித்து, ஆவணப் படங்களை, தகுந்த ஆதாரங்களுடன், சேனல், 4 செய்தி நிறுவனம் வெளியிட்டது.
அதையடுத்து, தமிழகம் முழுவதும், கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர், நாள்தோறும், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்களது போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.
எனினும், கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள், மாநிலம் முழுவதும், தொடர்ந்து நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, நாமக்கல்லில் உள்ள, செல்வம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், அக்கல்லூரி முன், நேற்று காலை முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
போராட்டதில், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டன. மேலும், இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இந்தியா தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே, போராட்டம் கைவிடப்படும் என, மாணவர்கள் தெரிவித்தனர்.
அசம்பாவிதம் தவிர்க்க, உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்தின் அருகே, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.