தேனி: ஓராண்டு இடைவெளிக்கு பின், தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் டீன் பொறுப்பேற்றார். கண்காணிப்பாளர் மட்டும் இன்னும் நியமிக்கப்படவில்லை.
தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி டீன், கண்காணிப்பாளர் பணியிடங்கள் கடந்த ஓராண்டாக காலியாகவே இருந்து வந்தது. இதனால் ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரி நிர்வாக பணிகள் முற்றிலுமாக முடங்கின. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் விரும்பி சேரும் அளவுக்கு கல்வித்தரம் உயர்ந்திருந்தது. டீன் இல்லாத நிலையில் இங்கு நிர்வாகம் சிதைந்து மாணவர்கள் குடிநீருக்கும், தரமான கல்விக்கும் போராடும் நிலை ஏற்பட்டது. மாணவ, மாணவிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், அவர்களது கோரிக்கைகள் நிறைவேறாமலேயே உள்ளது.
இந்நிலையில், ஓராண்டுக்கு பின் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மயக்கவியல்துறை பேராசிரியர் மீனாட்சிசுந்தரம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி டீனாக நியமிக்கப்பட்டார். நேற்று காலை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றதும் முதல் பணியாக ஆஸ்பத்திரி, கல்லூரியை சுற்றிப்பார்த்து, ஆய்வு பணிகள் மேற்கொண்டார். டீன் நியமிக்கப்பட்ட நிலையில், மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் பணியிடம் இன்னும் காலியாகவே உள்ளது. இந்த பணியிடத்தையும் நிரப்பினால் மட்டுமே, முழுமையான நிர்வாகத்தை வழங்க முடியும்.
எனவே டீன் தனது முதல் நடவடிக்கையாக கண்காணிப்பாளர் நியமிக்க நடவடிக்கை எடுப்பதோடு, சிதைந்து கிடக்கும் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி நிர்வாகத்தை சீரமைத்து, நோயாளிகள் பயன் பெறும் வகையில் மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.