ஒரே படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், அதை, ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் படிக்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதுதான், மல்டிபிள் கேம்பஸ் படிப்பு. வெளிநாட்டில் வளாகங்கள் வைத்திருக்கின்ற, ஏறக்குறைய அனைத்து கல்வி நிறுவனங்களுமே இதுபோன்ற படிப்புகளை வழங்குகின்றன.
அமைட்டி பல்கலைக்கழகம், 3 - கண்ட(continent), பி.பி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளை, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் மேற்கொள்ளும் வகையில் வழங்குகிறது. இதன்மூலம், முதல் 18 மாதங்கள் அமைட்டி வளாகத்திலும், 12 வாரங்கள் பிரிட்டன் வணிகப் பள்ளியிலும், 12 வாரங்கள் அமெரிக்க வணிகப் பள்ளியிலும் படிக்கலாம்.
குளோபல் மேலாண்மைக்கான எஸ்.பி.ஜெயின் கல்வி நிறுவனத்தில், MGB மற்றும் GMBA ஆகிய படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், ஒரே ஆண்டில், 3 நாடுகளில் படிப்பை மேற்கொள்வார்கள். MGB படிப்பில் உள்ளடங்கிய 4 மாத இன்டர்ன்ஷிப்பை, தங்களின் விருப்பமான நாட்டில் மேற்கொள்ள மாணவர்களுக்கு உரிமையுண்டு.
அக்கல்வி நிறுவனத்தில் பி.பி.ஏ., படிக்கும் மாணவர்கள், சிங்கப்பூர், துபாய் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய இடங்களுக்கு செல்கிறார்கள். இந்த மூன்று நாடுகளிலும், மாணவர்களின் தங்குமிட வசதிக்கான பொறுப்பை கல்வி நிறுவனமே ஏற்றுக் கொள்கிறது.
மணிப்பால் பல்கலையானது, இரட்டை வளாகம் மற்றும் இரட்டைப் பட்டப் படிப்புகளுக்காக, 4 வெளிநாட்டுப் பல்கலைகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அவை, பிரிட்டனின் லன்காஸ்டர் பல்கலை, பிரான்சின் இன்சா பல்கலை, பிரிட்டனின் எடின்பர்க் நேப்பியர் பல்கலை, கனடாவின் பிரேசர் வேலி பல்கலை போன்றவையாகும்.
சவால்கள்
வெளிநாட்டு வளாகங்களில் தாங்கள் வாங்கும் பட்டங்களுக்கான அங்கீகாரம்தான் பெரிய சவால். ஏனெனில், வெளிநாட்டிலுள்ள இந்திய பல்கலை வளாகங்களில், (அக்கல்வி நிறுவனம் இந்தியாவை சேர்ந்ததாக இருப்பினும்), வாங்கும் பட்டங்களை, இங்குள்ள சில அதிகாரிகள் அங்கீகரிப்பதில்லை.
சர்வதேச ஏஜென்சிகளிடமிருந்து அப்படிப்புகள் அங்கீகாரம் பெற்றிருக்கலாம். ஆனால், இந்தியாவில் அதன் நிலை என்ன என்பதை படிப்பில் சேரும் முன்பாக நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது. இதர சவால்கள் தனிமனிதன் தொடர்பானவை.
வீட்டுப் பிள்ளையாக இருந்தவர்கள், வெளிநாட்டின் வித்தியாசமான கலாச்சாரம், உணவுப் பழக்கம் மற்றும் காலநிலை ஒத்துவராதவர்களுக்கு, வெளிநாட்டு வளாகப் படிப்பு சிரமமான ஒன்று. ஒரே படிப்பை 3 நாடுகளில் படிக்கும் திட்டமானது, ஒரு மாணவரின் தாங்கு திறனையும், அவரின் சூழலுக்கேற்ற பழக்கப்படுத்திக் கொள்ளும் திறனையும் சோதிக்கும் ஒரு செயல்பாடே.
வெளிநாட்டு வளாக படிப்பிற்காக அதிகமாக செலவழிக்கும் அதேநேரத்தில், வெவ்வேறான நாடுகளின், உணவு, கலாச்சாரம், பருவநிலை மற்றும் வாழ்க்கை முறை ஆகிய அம்சங்களோடும் ஒரு மாணவர் ஒத்துப்போக வேண்டியுள்ளது.
பொதுவாக, இதுபோன்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், காலத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளும் வகையிலான தன்மையையேப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவர்களில் பலருக்கு இந்தி கலாச்சாரத்தைப் பற்றிய போதிய அறிமுகமோ அல்லது புரிதலோ இருப்பதில்லை என்று எஸ்.பி.ஜெயின் கல்வி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.