சென்னை: வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சர்.தியாகராய கல்லூரியின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்றியல் துறையானது, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பொருளியல் துறையுடன் இணைந்து, மாணவர்கள் பயன்பெறும் வகையில், "படிப்பும் - பணியும்" என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தின.
பிப்ரவரி 6ம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இரு துறைகளையும் சார்ந்த முன்னாள் மாணவர்கள் திரு.S.P.சுசீந்திரன்(மேலாளர், ICICI வங்கி), திரு.S.மதிவாணன்(வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்), திரு.M.மோகன்(நிர்வாகி, டெக்னாலஜிஸ்) ஆகியோர் பங்கேற்றனர்.
வரலாற்றுத் துறையின் தலைவர் டாக்டர்.S.N.நாகேஸ்வர ராவ், அனைவரையும் வரவேற்று, இனிய வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் திரு.A.குணசேகரன், சிறப்புரையாற்றினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் பேசியதாவது: வேலை வாய்ப்பு சந்தையில், ஆங்கில அறிவும், கணினி அறிவும் உடைய மாணவர்களே, சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்கள், ஆர்வமுடனும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடனும் உழைக்க வேண்டும். எப்போதுமே நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.
நம் வாழ்வின் தடைக்கற்களை சோர்ந்து விடாமல் வெற்றிகொள்ள வேண்டும். படிப்பின்போதே, வேலை வாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் போன்ற பல்வேறான பயனுள்ள கருத்துக்களை கூறினர். மேலும், மாணவர்கள் எழுப்பிய பல்வேறான கேள்விகளுக்கும், சிறப்பு அழைப்பாளர்கள் விடையளித்தனர்.
நிறைவாக, பொருளியல் துறை பேராசிரியர் டாக்டர்.M.பாண்டியன் நன்றியுரை கூற, நாட்டுப் பண் இசைப்புடன் விழா நிறைவடைந்தது.