சென்னை: யு.ஜி.சி.,யின் வழிகாட்டு நெறிமுறைகள், பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்பட்டும், கல்லூரியில் பின்பற்றப்படாததால், கல்லூரி ஆசிரியர்கள் பெரும் பாதிப்புள்ளாகி உள்ளனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உயர்கல்வி துறை செயலருக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, உயர்கல்வி துறை செயலருக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில தலைவர் பாண்டியன் அனுப்பியுள்ள மனு: கடந்த, 2010ல், யு.ஜி.சி.,யின் வழிகாட்டு நெறிமுறைகள், இதுவரை உயர்கல்வி துறையால் பின்பற்றப்படவில்லை இதனால், 2006ம் ஆண்டு ஜன., 1க்குப் பின், கல்லூரிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் தர ஊதிய, பணி மேம்பாடு தகுதி இருந்தும் வழங்கப்படாததால், பல்லாயிரக்கணக்கான கல்லூரி ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இதையடுத்து, யு.ஜி.சி., வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக அமல்படுத்த, நவ., 28ம் தேதி அரசாணை வெளியிட்டு, அரசு குழுவை அமைத்தது. இக்குழுவில், உயர்கல்வி துறை செயலர் தலைவராகவும், கல்லூரி கல்வி இயக்குனர் உறுப்பினர் செயலராகவும், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற துணை தலைவர், திருவள்ளுவர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர், உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆனால், இக்குழு இதுவரை கூட்டப்படாமல் உள்ளது. இதனால், கல்லூரி ஆசிரியர்களுக்கான தர ஊதியம் மற்றும் பணி மேம்பாடு கானல் நீராக தெரிகிறது. யு.ஜி.சி.,யின் வழிகாட்டு நெறிமுறைகள், பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் பொதுவாக உள்ள நிலையில், பாரதிதாசன் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள் தர ஊதியம் மற்றும் பணி மேம்பாட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஆனால், கல்லூரி ஆசிரியர்களுக்கு இது மறுக்கப்படுவதும், யு.ஜி.சி., வழிகாட்டு நெறிமுறைகளை அமுல்படுத்தவதில், அரசு இரட்டை நிலை எடுக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள, யு.ஜி.சி.,யின் நெறிமுறைகளின்படி, தகுதியுள்ள கல்லூரி ஆசிரியர்களுக்கு தர ஊதியம் மற்றும் பணி மேம்பாட்டை வழங்க, உயர்கல்வி துறையை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.