வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்வதற்கான அடிப்படை நல்ல ஜி.எம்.ஏ.டி.,(ஜிமேட்) மதிப்பெண்களும், தேவையான அளவு ஆங்கில அறிவும்தான். TOEFL மற்றும் IELTS ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் ஒருவரின் ஆங்கில அறிவு நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும்.
பல நாடுகளில், ஒரு வெளிநாட்டு மாணவர் எம்.பி.ஏ., சேர வேண்டுமெனில், அவர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த பணி அனுபவத் தகுதி, 2 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகள் வரை விரிகிறது.
நல்ல அகடமிக் சாதனைகள், கம்ப்யூட்டிங் திறன், திறன்சார் நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு மொழியில் புலமை ஆகியவை முக்கிய தகுதிகள்.
வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிக்க விரும்புவோர், அதற்கான முன்தயாரிப்பை, இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும்போதே தொடங்கிவிடுதல் நன்று. நோக்க அறிக்கை(SOP) எழுதுவதில், ஒரு மாணவர், தனது பேராசிரியர், கன்சல்டன்ட் அல்லது ஏற்கனவே, வெளிநாட்டுப் பல்கலையின் சேர்க்கை நடைமுறைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, அங்கே இடம்பெற்ற உங்களின் நண்பர் அல்லது முன்னாள் மாணவர்களிடம் உதவி கேட்கலாம்.
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில், நல்ல கல்வி நிறுவனம் எது என்பதைக் கண்டறிய, பழைய மாணவர்களிடம் உரையாடலாம், கட்-ஆப் மதிப்பெண்கள் பற்றி ஆராயலாம், வேலை வாய்ப்பு ரெக்கார்டுகள் பற்றி அலசலாம் மற்றும் இடஅமைவு, உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தரம் மற்றும் தகுதி, தொழில் நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு ஆகிய அம்சங்களை அலச வேண்டும்.
வெளிநாட்டில் படிக்கச் செல்லுதல் என்ற நிலை வரும்போது, பெயர்பெற்ற கல்வி நிறுவனத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கவும். அதேசமயம், இன்னொன்றையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிக்க வேண்டுமெனில், அமெரிக்கா அல்லது பிரிட்டன் ஆகிய நாடுகளில்தான் படிக்க வேண்டும் என்பதில்லை.
அங்கே படித்தால்தான், படிப்பிற்கான பயனை அனுபவிக்க முடியும் என்பதில்லை. ஆசிய நாடுகளை எடுத்துக்கொண்டாலே, அங்கே மிகச்சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை ஒப்பிடும்போது செலவு மிகவும் குறைவதோடு, நல்ல தரமான கல்வியும் கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எம்.பி.ஏ., சேர்க்கையில் திறன்சார் நடவடிக்கைகள்
சில கல்வி நிறுவனங்கள், extra curricular activities எனப்படும் திறன்சார் நடவடிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன. ஏனெனில், திறன்சார் நடவடிக்கைகள், ஒருவரின் ஆளுமையை கட்டமைத்து, வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்து, அவரின் ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டில் பேருதவி புரிகின்றன.
திறன்சார் நடவடிக்கைகள் மூலம், ஒரு மாணவரின் பன்முகத்திறன் பற்றி, மேலாண்மை கல்வி நிறுவனங்கள் அறிந்துகொள்ள முடியும். தனியார் வணிகப் பள்ளிகள், மாணவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகளின்போது, திறன்சார் நடவடிக்கைகள் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.
பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள், ஒரு மாணவரின் திறன்சார் நடவடிக்கைகளுக்கு தனி வெயிட்டேஜ் கொடுக்கின்றன. ஏனெனில், எம்.பி.ஏ., படிப்பு என்பது 360 டிகிரி முறையிலான ஒட்டுமொத்த மேம்பாடு சார்ந்தது என்பதால்.
எனவே, திறன்சார் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டு, அதற்கான சான்றிதழ்கள் உள்ளிட்ட அத்தாட்சிகளைக் கொண்டிருக்கும் மாணவர்கள், எம்.பி.ஏ., படிப்பில் சேர்வதற்கான நேர்முகத் தேர்வின்போது முக்கியத்துவத்தைப் பெற்று, தங்களுக்கான இடங்களை உறுதி செய்யும் வாய்ப்புகள் மிக அதிகம்.
ஏனெனில், வெறும் பாட மதிப்பெண்களின் மூலமாக ஒருவர் நடைமுறை வாழ்வின் சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன்களையும், மனோதிடத்தையும் பெற்றுவிட முடியாது என்பதும், அதன்மூலமாக மட்டுமே ஒரு மாணவரின் அறிவை சோதனையிட முடியாது என்பதும் பல உயர்கல்வி நிறுவனங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.