கேம்பஸ் இன்டர்வியூ என்ற பெயரில் பல லட்சம் மோசடி: மூவர் சஸ்பெண்ட்நவம்பர் 26,2012,09:50 IST
எழுத்தின் அளவு :

ஊட்டி: தனியார் பொறியியல் கல்லூரியில், "கேம்பஸ் இன்டர்வியூ&' என்ற பெயரில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்த, கல்லூரி முதல்வர் உட்பட, மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், கேத்தியில், சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லூரி உள்ளது; கோவை தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.,) கட்டுப்பாட்டில் உள்ள இக்கல்லூரியில், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இக்கல்லூரியின் முதல்வர் உட்பட, இரண்டு நிர்வாகிகளை, சி.எஸ்.ஐ., நிர்வாகம், நேற்று, திடீரென "சஸ்பெண்ட்&' செய்தது.
இதுகுறித்து, தென்னிந்திய திருச்சபையின் நிர்வாக அதிகாரி போஸ் எபினேசர் கூறியதாவது: கல்லூரி முதல்வர் ஜெயபாலன், 65, முறைகேடுகளில் ஈடுபட்டார்; பணி ஓய்வு பெறும்படி, பல முறை கூறியும் ஏற்கவில்லை. "கேம்பஸ் இன்டர்வியூ&' மூலம் வேலை வழங்கப்படும் எனக்கூறி, ஒவ்வொரு மாணவரிடமும், 3,000 - 4,000 ரூபாயை, கல்லூரி நிர்வாகம் கேட்டதாக வசூலித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், "ஐ.பி.எம்.,&' என்ற கம்பெனி பெயரில், டில்லியை அடுத்த, கூர்கான் பகுதியில் இருந்து சிலரை வரவழைத்து, முதல்வர் ஜெயபாலன், "கேம்பஸ் இன்டர்வியூ&' நடத்தினார். இதில், 12 பேருக்கு பணி நியமன, ஆணை வழங்கப்பட்டது. ஆனால், அவை போலியானது என, தெரிய வந்தது.
இந்த மோசடியால் மாணவ, மாணவியரிடம் இருந்து வசூலிக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை, வீணடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுக்கு கல்லூரி முதல்வர், நிர்வாக அதிகாரி உட்பட, சிலர் உடந்தையாக இருந்துள்ளனர்.இது தொடர்பாக, கல்லூரி அலுவலர்கள், விரிவுரையாளர்கள் சிலர், ஆதாரத்துடன் சி.எஸ்.ஐ., நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
அதன் அடிப்படையில், கல்லூரி முதல்வர் ஜெயபாலன், கல்லூரி நியமன அதிகாரி முகிலன், கல்லூரி நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் ஆகியோர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, கல்லூரி முதல்வருக்கு ஆதரவாக, கல்லூரிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில், ஊட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன், ஜோஸ் மற்றும் பாபு ஆகிய மூவரை, கேத்தி, போலீசார் கைது செய்தனர்.