மாணவனை சிறுநீர் குடிக்க வைத்ததாக ஆசிரியர் மீது புகார்நவம்பர் 24,2012,09:33 IST
எழுத்தின் அளவு :

ஐதராபாத்: எல்.கே.ஜி., படிக்கும் மாணவனை, வகுப்பு ஆசிரியை, சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம், ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
ஆந்திரா, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சத்யாபாமா ஆங்கிலப் பள்ளியில், எல்.கே.ஜி., வகுப்பில் படிக்கும் மாணவன், சிறுநீர் கழிப்பதற்காக, வகுப்பு ஆசிரியையிடம் அனுமதி கேட்டான். ஆனால், அனுமதி அளிக்க மறுத்த ஆசிரியை கவுரி, அந்த சிறுவனிடம், பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்து, சிறுநீரை பிடிக்கும்படி கூறியுள்ளார்.
இதன்பின், பாட்டிலில் இருந்த சிறுநீரை, அந்த மாணவனிடம் கொடுத்து, குடிக்கும்படி ஆசிரியை கட்டாயப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன், இதுகுறித்து, தன் பெற்றோரிடம் அழுதபடி, புகார் செய்ததை அடுத்து, மாணவனின் பெற்றோரும், உறவினர்களும், பள்ளிக்கு திரண்டு வந்தனர். சம்பந்தபட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினர். போலீசில் புகாரும் செய்தனர்.
இதையடுத்து, போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.இந்த தகவலை மறுத்துள்ள பள்ளி நிர்வாகம், "மாணவர்கள், சிறுநீரை பிடித்து, ஒருவர் மீது, ஒருவர், ஊற்றி விளையாடியுள்ளனர். சம்பந்தபட்ட மாணவனும், விளையாடியுள்ளான். ஆனால், மாணவனின் பெற்றோர், இதை தவறாக புரிந்து, புகார் செய்துள்ளனர் என, கூறியுள்ளது.
இதற்கிடையே, இதுகுறித்து விசாரணை நடத்திய, கிழக்கு கோதாவரி மாவட்ட கலெக்டர் நீத்து குமாரி பிரசாத், அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, பரிந்துரை செய்துள்ளார். மாணவர்களை, இதுபோல் தண்டிக்கும், மற்ற பள்ளிகளுக்கும், இது தொடர்பாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது