பள்ளி, கல்லூரி வாகன ஓட்டிகளுக்கு கண் பரிசோதனை சான்று: தமிழக அரசு | Kalvimalar - News

பள்ளி, கல்லூரி வாகன ஓட்டிகளுக்கு கண் பரிசோதனை சான்று: தமிழக அரசுசெப்டம்பர் 09,2012,11:14 IST

எழுத்தின் அளவு :

"தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்களுக்கு, அரசு மருத்துவமனையில், போக்குவரத்து அலுவலர்கள் முன்னிலையில், கண் பரிசோதனை செய்து, சான்று பெற வேண்டும்" என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளில், மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்வதற்கு, பஸ், மினி பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர். மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. "பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு நிலை குறித்து, சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசார், வருவாய் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், பள்ளி வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஒரு கமிட்டி அமைக்கப்படும்" என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, "பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்கள், கண் மற்றும் உடல் நிலை குறித்து, அரசு மருத்துவமனையில், சான்று பெற வேண்டும். கண் பார்வை குறைபாடு, கண் பாதிப்பு உள்ளவர்களை, டிரைவர் பணியில் அமர்த்தக் கூடாது" என, புது நிபந்தனை விதித்துள்ளது.

பத்து ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்களை, பள்ளி வாகன டிரைவர்களாகவும், டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன அடையாள அட்டை அணிந்தும், மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறியதாவது: பள்ளி, கல்லூரி வாகனங்களில், மாணவர்களை ஏற்றிச் செல்லும்போது, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதில், மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பள்ளி வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்து, சான்று வழங்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், 11 போக்குவரத்து மண்டலங்கள், 66 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 50 மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகங்கள் உள்ளன. இதில், மண்டல போக்குவரத்து இணை ஆணையர் தலைமையிலான, வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர், பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு நிலை குறித்து, அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு, ஆய்வு மேற்கொள்ளும்போது, விதிமுறைகளை மீறி இருந்தால், வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us