தேனி: தேனியில் நாள் வாடகைக்கு மொபைல் போன் வாங்கி, அதில் ஆபாச படம் பார்க்கும் பழக்கம், பள்ளி மாணவர்களிடம் பரவி வருகிறது.
தேனி மாவட்டத்தில் பல பள்ளிகளில், ஆபாச படத்துடன் கூடிய வாடகை மொபைல் போனுடன் மாணவர்கள் வலம் வருகின்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் உள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவனிடம் விலை உயர்ந்த மொபைல் போன் இருந்தது. ஏழ்மையில் இருக்கும் மாணவனிடம், எப்படி விலை உயர்ந்த மொபைல் போன் இருக்கும், என ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து அந்த ஆசிரியர் மாணவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தார். அப்போது, அதே மொபைல் போன் வேறு வகுப்பில் உள்ள மற்றொரு மாணவரிடம் இருந்தது. அதை பறிமுதல் செய்த ஆசிரியர், மாணவரிடம் அன்பாக விசாரித்து, சோதனை செய்தபோது, பல ஆபாச வீடியோ படங்கள் இருந்தன.
இந்த மொபைல் போனை ஐ.டி.ஐ., மாணவர் ஒருவர், பள்ளி மாணவர்களிடம் வாடகைக்கு விட்டுள்ளார். ஒரு நாளைக்கு 50 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுகிறது. இதை மாணவர்கள் போட்டி போட்டு, நாள் வாடகைக்கு வாங்கி படம் பார்த்து வரும் விவரம் தெரியவந்தது.
இந்த கலாச்சாரம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது என்பது கூடுதல் தகவல். மாணவர்களின் இந்த மொபைல் போன் ஆபாச படம் பார்க்கும் மோகத்தை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணித்து, அவர்களை விளையாட்டு, படிப்பு என நல்வழிபடுத்த வேண்டும். மொபைல் போனில் ஆபாச படம் பதிந்து கொடுக்கும், கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.