சென்னை: இந்தோ-ஜெர்மன் அர்பன் மேலா என்ற பன்முக நிகழ்ச்சி, சென்னை நந்தனத்திலுள்ள உடற்கல்விக்கான ஒய்.எம்.சி.ஏ கல்லூரியில், ஆகஸ்ட் 24ம் தேதி முதல் நடந்துவருகிறது. வரும் செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வு, பல்வேறான சிறப்பம்சங்களைக் கொண்டது.
இந்த வைபவத்தின் மாணவர் மற்றும் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றிய ஒரு பார்வை:
விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு, இந்நிகழ்ச்சியில் நல்ல வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதி, பீச் வாலிபால் விளையாட்டில் இந்திய தேசிய சாம்பியன்கள் மோகன் மற்றும் பிரதீப் ஜான் ஆகியோருடன், ஜெர்மன் சாம்பியன்களான ஹான்ஸ் பச்னர் மற்றும் டொமினிக் ரிட்சர் ஆகியோர் கலந்துகொண்டு, நுணுக்கங்களை பகிரவுள்ளனர்.
விளக்கு அலங்கார அமைப்பு
லைட்டிங் ரிசர்ச் அன்ட் டிசைன் இயக்குநர் அமர்தீப் துகர், அண்ணா பல்கலை மற்றும் இந்துஸ்தான் பல்கலையின் கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் துறையுடன் இணைந்து, விளக்கு அலங்கார அமைப்பை நிறுவியுள்ளார்.
இதன்மூலம் இளம் கட்டடக் கலைஞர்கள் மற்றும் துறை மாணவர்கள், விளக்கு அலங்கார அமைப்பின் நுட்பத்தையும், நிபுணத்துவத்தையும் கற்க வழியேற்படுகிறது. நகர்ப்புற இடங்களை எந்தளவு சிறப்பான விளக்கு அலங்கார அமைப்பால் மேம்படுத்தலாம் என்பதையும் கற்றுக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான கதை சொல்லும் திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல் பற்றி சுவையான வழிமுறைகளில், அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அம்சங்களும் இதில் இடம்பெற்றன.
வினாடி-வினா, பெயின்டிங், பாடுதல், நாடகம், இசை, நடனம் மற்றும் உடையலங்காரம் போன்ற மாணவர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் அம்சங்களும் இவற்றில் உண்டு. மேலும் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறையும்(work shop) உண்டு.
ஆகஸ்ட் 29ம் தேதி நிகழ்ச்சி நிரல்
கவிதை மற்றும் இதர சிறிய இலக்கிய படைப்புகளை உருவாக்குதல், கனவு நகரம் பற்றிய பயிற்சி பட்டறை, கழிவுப்பொருள் மேலாண்மைப் பற்றிய பயிற்சி பட்டறை போன்றவை குழந்தைகளுக்காக நடத்தப்படும்.
திறமை வாய்ந்த இளைஞர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான நிகழ்ச்சிகளும் உண்டு.
ஆகஸ்ட் 30ம் தேதி நிகழ்ச்சி நிரல்
குழந்தைகளுக்கான ஒரு பயிற்சி பட்டறை மற்றும் வினாடி-வினா போட்டி நடைபெறும்.
மேலும், 1 நிமிட படப் போட்டியும் நடைபெறும்.
ஆகஸ்ட் 31 நிகழ்ச்சி நிரல்
குழந்தைகளுக்கான பயிற்சி பட்டறைகள், பலவிதமான தலைப்புகளில் நடத்தப்படும்.
மாணவர்களுக்கான பாடல் எழுதும் போட்டியும் உண்டு.
செப்டம்பர் 1 நிகழ்ச்சி நிரல்
இந்த அர்பன் மேலா நிகழ்ச்சியானது, மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு செமினார்கள், கதை சொல்லல், மொழிப்பாட கற்பிப்பு, அனுபவங்களைப் பகிர்தல், கற்பித்தல் தொடர்பான சிரமங்கள் பற்றிய விவாதம் உள்ளிட்ட பல அம்சங்கள் ஆசிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதே தினத்தில், அனைத்து வயதினருக்குமான கவிதை மற்றும் தியேட்டர் பயிற்சி பட்டறைகளும் உண்டு.
குழந்தைகளுக்கான விரல் பொம்மை செய்யும் பயிற்சியும், வேறு பயிற்சி பட்டறையும் உண்டு.
செப்டம்பர் 2 நிகழ்ச்சி நிரல்
குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான பல உடல் மற்றும் மனம் சார்ந்த போட்டிகள் நடைபெறுகின்றன
மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சி
இந்திய - ஜெர்மன் கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற நிகழ்ச்சியும் உண்டு. இதுதொடர்பான அனுபவங்களை அறிந்துகொள்ள இது ஓர் அரிய வாய்ப்பு!
மேலும், சிறப்பான இசை நிகழ்ச்சியும் உண்டு.
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், பலவிதமான திறன் மேம்பாடு, சிந்தனை மேம்பாடு, விளையாட்டு, இசை, ஓவியம் உள்ளிட்ட எண்ணற்ற அம்சங்களைக் கொண்டதோடல்லாமல், சிறப்பான நகரமைப்பு தொடர்பான ஒரு அறிவையும், அனுபவத்தையும், மகிழ்வையும் தரும் வைபவமாக அமைந்திருக்கும் இந்தோ - ஜெர்மன் அர்பன் மேலாவுக்கு வருகை தந்து, பயன்பெறலாம்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை.