சென்னை: தமிழகத்தில், 23 அரசு செவிலியப் பள்ளிகளும், 197 தனியார் செவிலியப் பள்ளிகளும் செயல்படுகின்றன. இதில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் பயில்கின்றனர்.
இவர்களில் இறுதி ஆண்டில் மட்டும், 4,000க்கும் மேற்பட்ட மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில், தற்போது, 83 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இந்த விகிதத்தை அதிகரிக்கவும், செவிலியர் பயிற்சி தேர்வாணையம் சார்பில் கூட்டம் நடந்தது.
இதில், ஒரு பாடத்தில் தவறியவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்காக, ஐந்து வரை கருணை மதிப்பெண் வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய நர்சிங் கவுன்சில் விதிப்படி, ஐந்து மதிப்பெண் வரை கருணை அடிப்படையில் வழங்கலாம். அதனால், தற்போது ஒரு பாடத்தில் தவறியவர்கள், முழுமையாக தேர்ச்சி பெற, கருணை அடிப்படையில் அதே மதிப்பெண் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.