சென்னை: படிக்க வாய்ப்பில்லாத சிறுமிகளை கண்டறிந்து, பள்ளியில் சேர்த்த சாதனை மாணவியால், அப்பகுதியில் பல குழந்தைகள் படித்து வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு, சாஸ்திரி நகரில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், இடைக்கால பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் நோக்கம் படிக்க வாய்ப்பில்லாத, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கண்டறிந்து, ஓர் ஆண்டு அடிப்படைக் கல்வியை கற்று தர வேண்டும். பின் மாணவர்களின் வயதுக்கேற்ப, உரிய வகுப்பில், படிப்பை தொடர செய்ய வேண்டும். இடைக்கால பள்ளியில், இந்த ஆண்டு 20 பேர் சேர்ந்துள்ளனர். அதில் லட்சுமி என்ற மாணவி பெற்றோர் அனுமதியின்றி, பள்ளியில் சேர்ந்துள்ளார். அத்துடன் ஏழு மாணவர்களை இடைக்கால பள்ளியிலும், இரண்டு மாணவர்களை சத்துணவு மையத்திலும் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து லட்சுமி கூறியதாவது: நான் படித்ததுபோல் என் தெருவில் உள்ள, பிள்ளைகளும் படிக்க வேண்டும் என நினைத்தேன். ஆரம்பத்தில் நான் அழைத்து, பள்ளிக்கு வர முடியாது என்று கூறி விட்டனர். பின், தினமும், இரவில் வீட்டில் சென்று, நான் படிப்பதை பார்த்து விட்டு பள்ளியில் சேர்வதாகக் கூறினர். அதனால், பள்ளிக்கு அழைத்து வந்தேன். இப்போது அவர்களும் நன்கு படிக்கிறார்கள். இவ்வாறு லட்சுமி கூறினார்.
இடைக்கால பள்ளி ஆசிரியை கீதா கூறுகையில், "படிக்க வாய்ப்புகள் கிடைக்காத மாணவர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து, பிழைக்க வந்தவர்களின் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற நோக்கில் இது துவங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், பிள்ளைகளை தேடி சென்று, படிக்க வருமாறு அழைத்தேன். பின்புதான் பெற்றோரிடம் பிள்ளைகளை படிக்க அனுப்புமாறு கூறுவேன்.
வீடுவீடாக தினமும் சென்று, பிள்ளைகளை அழைத்து வந்து பாடம் நடத்துவேன். ஒருநாள் லட்சுமி, நானும் படிக்க வருகிறேன் என கேட்டாள். நானும் அவளை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தேன். தான் படிப்பதை போல் மற்றவர்களும் படிக்க வேண்டும் என, எண்ணி பலரை பள்ளியில் சேர்த்துள்ளார்" என்றார்.