சென்னை: பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் காரணமாக, மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, பள்ளி வாகனக் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை முடிச்சூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளிச் சிறுமி சுருதி, பள்ளி வாகனத்தில் இருந்த துவாரம் வழியாக கீழே விழுந்து உயிரிழந்தது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.
இதனையடுத்து, பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்ற கண்காணிப்பை தீவிரமாக்கிய தமிழக அரசு, தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் அனுமதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையையும் பாதுகாப்பு கருதி குறைத்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பள்ளி வாகனக் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயித்தால் தான் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சில பெற்றோர் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதங்கள்....
வாசுதேவன், முடிச்சூர்: பள்ளி வாகனங்களின் திடீர் வேலை நிறுத்தத்தால், பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னை குறித்து, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்.
ஜோதி, கிழக்கு தாம்பரம் : விதிமுறைகளை கடைபிடிக்காத வாகனங்களுக்கு எதிராக, கடந்த பத்து நாட்களாக அரசு அதிகாரிகள் செய்யும் பணிகளை, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் எதிர்த்து வருகின்றனர். திடீரென நேற்று அறிவித்த வேலை நிறுத்தத்தால், பள்ளிக்கு உரிய நேரத்தில் மாணவர்கள் செல்ல முடியவில்லை. இப்பிரச்னையில் அரசு தலையீட்டு, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன், சைதாப்பேட்டை: எனது பேத்தி, தி.நகரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வருகிறார். இரண்டு நாட்கள், பள்ளி ஆட்டோ ஓட்டுனர்களின் வேலை நிறுத்ததால், பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டது. எனது பேத்தியை, இரண்டு நாட்களும் வேறு ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பினேன். இதற்கு ஒரு நாளைக்கு, 100 ரூபாய் கட்டணம் செலுத்தினேன்.
வசந்தா, நங்கநல்லூர்: என் மகள் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். தினமும் பள்ளி வாகனத்தில் தான் சென்று வருவார். நேற்று அறிவிப்பின்றி, வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். நானும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதால், மகளை பள்ளிக்கு கொண்டு விட்டு சென்றதால், பணிக்கு காலதாமதமாக சென்றேன்.