மதுரை: மதுரை காமராஜ் பல்கலை விடுதி மாணவர்கள் போராட்டம் குறித்து கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
விடுதி மற்றும் உணவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலை விடுதி மாணவர்கள், ஜூலை 19 முதல், போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நேற்று, மாணவர், ஆசிரியர்களுடன் கலெக்டர் பேச்சு நடத்தினார்.
குமார் தலைமையில் மாணவர்கள், பேராசிரியர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆசிரியர்கள், பதிவாளர் (பொறுப்பு) பிச்சைமணி பங்கேற்றனர். தனித்தனியாக, 2 மணி நேரம் கலெக்டர் பேச்சு நடத்தினார்.
பின், மாணவர் குமார் கூறுகையில், கலெக்டரிடம் நடத்திய பேச்சு குறித்து மாணவர்களிடம் தெரிவித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை போராட்டம் தொடரும் என்றார்.
பதிவாளர் (பொறுப்பு) கூறியதாவது: போராட்டத்தை ஆசிரியர்கள் சிலர் தூண்டி விடுகின்றனர். விடுதியில் பல ஆண்டுகளாக விதிமீறி தங்கியுள்ள நபர்கள், உதவி பேராசிரியர்கள் குறித்தும், போராட்டத்துக்கு பின்னணியில் உள்ள ஆசிரியர்கள் குறித்த ஆதாரங்களை, கலெக்டரிடம் கொடுத்துள்ளோம். சிலர், ஆறு முதல் 12 ஆண்டுகள் வரை விடுதியில் உள்ளனர். துணைவேந்தர் பேச்சு நடத்தி முடிவு காண்பார் என்றார்.