சென்னை: விருத்தாசலம், சென்னை, திண்டுக்கல் பீங்கான் தொழில்நுட்பப் பயிற்சி மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குத் தேவையான தொழில்நுட்பப் பணியாளர்களை உருவாக்குவதற்காக, விருத்தாசலத்தில் அமைந்துள்ள பீங்கான் தொழில்நுட்பப் பயிற்சி மையத்தின் மூலம், மூன்றரை ஆண்டு கால, பீங்கான் தொழில்நுட்பம் பட்டயப் படிப்பு நடத்தப்படுகிறது.
இது தவிர, திண்டுக்கல், கருவி பொறியியல் பயிலகத்தின் மூலம், மூன்று ஆண்டு கால அச்சு மற்றும் பொறியியல் படிப்பு; சென்னையில் உள்ள அரசினர் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் மூலம், மூன்று ஆண்டு கால அச்சு, பொறியியல், குளிர்பதனம் மற்றும் காற்று பதனவியல் ஆகிய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த மூன்று பயிற்சி நிறுவனங்களும் துவக்கப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. இதனால், இந்த நிறுவனங்களில், உள்கட்டமைப்பு வசதிகளை, அகில இந்திய தொழில்நுட்பக் குழு தெரிவிக்கும் நடைமுறைகளுக்கும், மாணவர்களின் தேவைக்கும் ஏற்ப மாற்றி அமைக்க வேண்டி உள்ளது. இதை கருத்தில் கொண்டு, விருத்தாசலம் பீங்கான் தொழில்நுட்பப் பயிற்சி மையத்திற்கு, 85 லட்ச ரூபாய்; திண்டுக்கல் கருவி பொறியியல் மையத்திற்கு, 95 லட்ச ரூபாய்; கிண்டி, தொழில்நுட்பப் பயிற்சி மையத்திற்கு, 1.20 கோடி ரூபாய் என, மொத்தம், மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.