பி.எல்., படிப்பு:விண்ணப்பிக்க 15ம் தேதி கடைசி ஜூலை 14,2012,09:28 IST
சென்னை: மூன்றாண்டு பி.எல்., படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம் நாளை முடிகிறது.
தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான, ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., (ஹானர்ஸ்), பி.ஏ.பி.எல்., மற்றும் மூன்றாண்டு பி.எல்., (ஹானர்ஸ்), பி.எல்., உள்ளிட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.இவற்றில், பி.எல்.,(ஹானர்ஸ்), பி.எல்., மற்றும் எம்.எல்., பட்டபடிப்புகளுக்கு, கடந்த 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு முடிவுகள் காரணமாக, விண்ணப்ப வினியோகத்திற்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடு நாளையுடன் முடிகிறது.
மூன்றாண்டு பி.எல்., படிப்பிற்கு 1,262 இடங்களும், பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பிற்கு 60 இடங்களும், எம்.எல்., படிப்பிற்கு 60 இடங்களும் உள்ளன. பி.எல்., (ஹானர்ஸ்), எம்.எல்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், வரும் 17ம் தேதி வெளியிடப்படுகிறது. பி.எல்., படிப்பிற்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.தொலைதூர படிப்பிற்கான தேதி நீடிப்பு:தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின், தொலைதூரக் கல்வி இயக்கம் மூலம் வழங்கப்படும் முதுநிலை பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பிற்கான விண்ணப்பம் நாளையுடன் முடிவதாக இருந்தது. இக்காலக்கெடு, அடுத்த மாதம், 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.