சென்னை: தமிழக அரசு கல்லூரிகளில், மொத்தம் 1623 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு 11 பல்கலைக்கழக உறுப்பு கலை-அறிவியல் கல்லூரிகளையும், இந்தாண்டு 3 பொறியியல் கல்லூரிகள், 7 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 11 பல்கலைக்கழக உறுப்பு கலை-அறிவியல் கல்லூரிகளையும் துவக்க ஆணையிட்டுள்ளேன்.
மேலும், புதிய பாடப்பிரிவுகள் துவங்க வேண்டியதன் அவசியமும் உணரப்பட்டு, 51 கல்லூரிகளில் 299 புதிய இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகளை துவக்கிட ஆணையிட்டேன்.
இதற்கென, நடப்பு கல்வியாண்டில், 369 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், அடுத்தக் கல்வியாண்டில்(2013-14) 365 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் 2014-15 கல்வியாண்டில் 107 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 841 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை புதிதாக உருவாக்க ஆணையிடப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கான பணியிடங்கள் மற்றும் காலிப் பணியிடங்கள் ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 1623 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
இந்த உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப காலதாமதம் ஆகும் என்பதால், தற்காலிக அடிப்படையில், கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களின் மூலம் நிரப்பப்படவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கூறிய கவுரவ விரிவுரையாளர்கள், உடனடியாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இவர்களுக்கு, மாதம் ரூ.10000 ஊதியமாக வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.