சென்னை: மகாபலிபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் புதிய பசுமை வளாகத்தை, தமிழக கவர்னர் ரோசய்யா, பேராசிரியர் பாலா வி.பாலச்சந்தருக்கு அர்ப்பணித்தார். மேலும், PGDM பயிற்சி வகுப்பும் துவங்கப்பட்டது.
மகாபலிபுரம் அருகே அமைந்துள்ள, கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் பசுமை வளாகமானது, மொத்தம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில், ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர்களுக்கான அலுவலகங்கள், குடியிருப்புகள், நிர்வாகம், மாணவர்களுக்கான தங்குமிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் என தனித்தனி பிரிவுகளுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில், அதிநவீன வசதிகள் கொண்ட வளாகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தை பேராசிரியர் பாலா வி.பாலச்சந்தருக்கு அர்ப்பணித்த ஆளுநர் ரோசய்யா, வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் கண்ணோட்டம் கொண்ட, எம்.பி.ஏ பாடத்திட்டம் கொண்ட, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கிரேட் லேக்ஸ் -ன் இரண்டாண்டு கால PGDM பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
இந்த இரண்டாண்டு கால PGDM பயிற்சி வகுப்பின் முதல் குழுவில் 120 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு, வளரும் பொருளாதாரங்கள் குறித்த கண்ணோட்டத்துடன், வழக்கமான எம்.பி.ஏ பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும்.
இந்த PGDM திட்டம், உயர்கல்வியில், பெண்களுக்கு சிறப்பு கண்ணோட்டம் கொண்டுள்ளது. முதல் குழுவில் 40% பேர் பெண்கள். நாட்டின் அனைத்துப் பகுதி மாணவர்களும் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர். எம்.பி.ஏ படிப்பை வித்தியாசமாக வழங்கும் அம்சத்தை கிரேட் லேக்ஸ் கொண்டுள்ளது. வளரும் பொருளாதாரங்களில் தெளிவான கண்ணோட்டம் கொண்ட மாணவர்களைக் கவரும் வகையில் இந்தப் பயிற்சி திட்டம் அளிக்கப்படுகிறது.