முறையாக கட்டாததால் பள்ளி கட்டடம் இடிந்து தரைமட்டம்ஏப்ரல் 30,2012,12:27 IST
எழுத்தின் அளவு :

காரியாபட்டி: மல்லாங்கிணரில் பள்ளி கட்டுமானப் பணிகள் முடியும் முன்பாக கட்டடம் இடிந்து தரைமட்டமானது. மாணவர்கள் விடுமுறையில் இருந்ததால் உயிர் தப்பினர். மல்லாங்கிணரில், மதுரை மண்டலம் தென்னிந்திய திருச்சபைக்கு உட்பட்ட தேவாலயம், சி.எஸ்.ஜ.,தொடக்கப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளி அரசு உதவிபெறும் பள்ளி. இதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். போதிய கட்டட வசதி இல்லாததால் நன்கொடை வசூல் செய்து கூடுதல் கட்டடங்கள் கட்டி வருகின்றனர். கட்டடப் பணிகள் முடியும் நிலையில், நேற்று முன்தினம் இரவில் திடீரென கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
விபத்து: கோடை விடுமுறை விட்ட அடுத்த நாளே கட்டடம் இடிந்ததால் மாணவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். பள்ளி நாட்களில் நடந்திருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். புதிய கட்டடம் கட்டுமானப் பணிகள் என்றாலும் மாணவர்கள் நடமாட்டம் இருக்கும். இதில் பலர் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
முன்னாள் செயலர் ராஜ்குமார் கூறியதாவது: அரசியல்வாதிகள், வியாபாரிகள், பொது மக்களிடம் நன்கொடை வசூல் செய்து, மதுரை மண்டல திருச்சபை மற்றும் கல்வித்துறை அனுமதியின்றி பள்ளி நிர்வாகத்தினர் தன்னிச்சையாகக் கட்டடம் கட்டுகின்றனர். முறையான கலவை, சரியான திட்டம் இல்லாத காரணத்தால் பாதியிலே இடிந்தது. பள்ளி நடைபெறும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். உரிய அனுமதியில்லாமல் கட்டடம் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
இடி தாக்கியது: ஞானமணி, பள்ளித் தலைமையாசிரியர் கூறுகையில், "இடி விழுந்ததால் தான் கட்டடம் இடிந்துள்ளது. மற்றபடி உறுதியாகத் தான் கட்டியிருந்தோம். கட்டடம் கட்ட பேரூராட்சி, பிஷப்பிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளோம். கல்வித்துறையில் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை,'' என்றார்.