சென்னை: விளையாட்டு பயிற்சியாளர் காலி பணியிடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளதால், விளையாட்டுத் துறையில் இளைஞர்கள் அதிக மேம்பாடு பெற, வாய்ப்பு உருவாகி உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தடகளம், பேட்மிட்டன், கூடைப் பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, ஜூடோ, டேக்வாண்டே, டென்னீஸ், வாலிபால் உள்ளிட்ட, பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சியாளர்கள் ஓய்வு மற்றும் பதவி உயர்வு பெற்று சென்றுள்ளனர். இந்த காலி பணியிடங்களுக்கு, இதுவரை யாரையும் நியமிக்க வில்லை. இவற்றின் மொத்த எண்ணிக்கை, 90க்கும் மேல் இருக்கும் என, கூறப்படுகிறது.
விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டுமானால், மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து அவர்களை ஊக்கப்படுத்தினால், உள்ளூர் விளையாட்டு முதல் தேசிய விளையாட்டு வரை அவர்கள் கலந்து கொண்டு, பரிசுகள் பெற முடியும்; அதுமட்டுமின்றி, தேசிய, உலக விளையாட்டில் பங்கேற்க, ஒரு நுழைவு வாயிலாகவும் அமையும்.
பயிற்சியாளர் பணி நியமனம் குறித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவரை தொடர்புக் கொண்ட போது, அவர் கூறியதாவது: இந்த காலி பணியிடங்களுக்கான பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இன்னும், 15 நாட்களில் அவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, கோடைக்கால பயிற்சியை மாணவர்களுக்கு அளிப்பர். இவ்வாறு, அவர் கூறினார்.