மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேவைப்படும் இன்ஜினியர்களுக்கான தேவையை யு.பி.எஸ்.சி., இந்தத் தேர்வை நடத்தி நிறைவேற்றுகிறது. சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங் ஆகிய முக்கிய பிரிவுகளாக இன்ஜினியர்களுக்கான துறைகள் பிரிக்கப்பட்டு இவற்றுக்கு நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில் சர்விசஸ் போலவே இதுவும் மிகுந்த போட்டியை உள்ளடக்கியுள்ள தேர்வு. இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தற்போது இறுதியாண்டு படிப்பவரும் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 21 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் நீங்கள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை தபால் அலுவலகங்களில் பெறலாம். இந்தத் தேர்வு 2 பகுதிகளாக நடத்தப்படுகிறது. முதல் பகுதி எழுத்துத் தேர்வு. இதில் 2 தாள்கள் உண்டு. முதல் தாள் அப்ஜக்டிவ் வகைத் தேர்வு.
2ம் தாள் விரிவாக விடையளிக்கும் பகுதி. இந்த 2 தாள்களும் நீங்கள் தேர்வு செய்யும் இன்ஜினியரிங் பாடத்திலிருந்தும் பொது அறிவு, ஜெனரல் எபிலிடி ஆகியவற்றிலிருந்தும் அமையும். இந்த எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்பு தரப்படுகிறது.