
நான் பொறியியலில் சேர்ந்து படித்து இரண்டாம் ஆண்டில் படிப்பை கைவிட்டுவிட்டேன். எனக்கு அறிவியலில் தான் ஆர்வம் அதிகம் என்று தெரிந்து கொண்டேன் என வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார்.
பொறியியலை தேர்வு செய்துவிட்டு, அறிவியலில் ஆர்வம் உள்ளது என்று கண்டறிந்தவர், கடைசியாக இருப்பதோ வழக்கறிஞராக. சில மாணவர்களுக்கு, தாங்கள் தேர்வு செய்திருக்கும் பாடப்பிரிவு தங்களுக்கு ஏற்றது இல்லை என்று தெரிந்ததும், அதனை மாற்றிக் கொள்ள வழி உள்ளது. ஆனால் பலரும், அது தெரிந்தும், வேறு வழியில்லாமல், அப்படிப்பிலேயே தொடரும் நிலை உள்ளது. இதனால் தாங்கள் தேர்வு செய்த படிப்பில் மிளிரவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவிக்கின்றனர்.
ஒரு சிலரே, தங்களுக்கு ஆர்வமுள்ள பாடப்பிரிவினை முதல் முறையிலேயே சரியாக தேர்வு செய்துவிடுகின்றனர்.
பல மாணவர்கள், பெற்றோரின் வற்புறுத்துதலுக்காவும், நண்பர்கள் எடுக்கும் பாடப்பிரிவை எடுப்பதற்காகவும், உறவினர்கள் சொன்னதற்காகவும், ஏதோ ஒரு பாடப்பிரிவை எடுத்துவிடுகின்றனர்.
பிறகுதான் தெரிகிறது, அந்த பாடப்பிரிவு, அவர்களது ஆர்வத்திற்கு நேர் எதிரானது என்று. பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகின்றனர். இந்த நிலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவு உங்களுக்கு ஏற்றதா என்பதை முதலில் தீர்மானியுங்கள்.